வனத்துறை பங்களாவில் இரவைக் கழித்த சுப்ரதா ராய்
லக்னோ: போலீஸ் கஸ்டடியில் எடுக்கப்பட்டுள்ள சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய், வனத்துறைக்குச் சொந்தமான கெஸ்ட் ஹவுஸில் இரவு முழுவதும் தங்க வைக்கப்பட்டார்.லக்னோவிலிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் இந்த கெஸ்ட் ஹவுஸ் உள்ளது.
3 கோடி சிறு முதலீட்டாளர்களுக்கு செலுத்த வேண்டிய ரூ. 24,000 கோடி பணத்தைச் செலுத்தத் தவறியது தொடர்பாக சுப்ரதா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதில் அவர் முன்ஜாமீன் கோரியிருந்தார். ஆனால் அது கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று சுப்ரதா ராயை லக்னோவில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.
தனது தாயாருக்கு உடல் நலம் சரியில்லாததால் அவருடன் இருக்க வசதியாக தன்னை வீட்டுக் காவலில் வைக்க வேண்டும் என்று சுப்ரதா கோரியிருந்தார். ஆனால் அதை கோர்ட்டும் ஏற்கவில்லை, போலீஸும் ஏற்கவில்லை.
இதையடுத்து நேற்று கைது செய்யப்பட்ட சுப்ரதா ராயை வனத்துறைக்குச் சொந்தமான பங்களாவில் நேற்று இரவு போலீஸார் தங்க வைத்தனர்.
செவ்வாய்க்கிழமை வரை சுப்ரதா ராய் போலீஸ் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றுதான் சுப்ரீம் கோர்ட், சுப்ரதா ராயின் மனுவை விசாரிக்கவுள்ளது.