டெல்லி திஹார் சிறையில் கான்பரன்ஸ் அறைக்கு மாற்றப்பட்டார் சுப்ரதா ராய்!
முதலீட்டாளர்களிடம் இருந்து பெற்ற ரூ. 20,000 கோடியை திருப்பித் தராமல் ஏமாற்றியதாக சஹாரா சுப்ரதா ராய் மீது புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் அவர் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் ரூ. 5,000 கோடி ரொக்கமாகவும், ரூ. 5,000 கோடிக்கு வங்கி உத்தரவாதமாகவும் அளித்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதையடுத்து அவர் லண்டன், நியூயார்க்கில் உள்ள தனது நட்சத்திர ஹோட்டல்களை விற்பதற்கு வசதியாக திஹார் சிறையில் உள்ள கான்பரன்ஸ் அறையை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும்படியும், காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வசதியாக மடிக்கணினி, இணைய தள இணைப்பு வசதிகளை பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்றும், இதற்கான செலவை சஹாரா நிறுவனமே ஏற்றுக் கொள்ளும் என்றும் சுப்ரதா ராயின் வழக்கறிஞர்கள் மனு தாக்கல் செய்தனர்.
அவரது இந்தக் கோரிக்கையை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான பெஞ்ச் ஏற்றுக் கொண்டு அனுமதி அளித்தது. ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் 10 வேலை நாட்கள் அவரை கான்பரன்ஸ் அறையை பயன்படுத்திக்கொள்ள சுப்ரதா ராய்க்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் கான்பரன்ஸ் அறையை சுப்ரதா ராய் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் அங்கு அவர் மாற்றப்பட்டார். அவருடன் சிறையில் உள்ள சஹாரா குழும அதிகாரிகள் அசோக் ராய், ரவி சங்கர் துபே ஆகியோரும் பலத்த பாதுகாப்புடன் கான்பரன்ஸ் அறைக்கு மாற்றப்பட்டனர்.
அந்த அறையில் சஹாரா குழுமத்தின் பணியாளர்கள் சுப்ரதரா ராயை சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு சிசிடிவி காமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது..