மானிய சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.5.57 உயர்வு!
மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.5.57-ஆக எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. அதே சமயம், மானியமில்லா சமையல் எரிவாயு விலை ரூ.14.50 குறைக்கப்பட்டுள்ளது.
டெல்லி: மானிய சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை ரூ. 5.57-ஆக இந்திய எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளது. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.50-ஆக உயர்ந்துள்ளது.
சர்வதேச பெட்ரோலிய சந்தையில் விலை நிர்ணய நிலவரத்தின்படி, பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையை 15 நாள்களுக்கு ஒரு முறை உயர்த்துவதும், குறைப்பதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் எண்ணெய் நிறுவனங்களின் அதிகாரத்துக்குட்பட்டதாக உள்ளது.
இந்நிலையில், மத்திய அரசின் மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.5.57 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் இன்று அறிவித்துள்ளன. இதனால் ரூ.434.93-க்கு விற்கப்படும் மானிய சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.440.5-ஆக உயர்ந்துள்ளது.
அதே வேளையில் மானியமில்லாத சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையோ ரூ.14.50- ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அவை ரூ.723-க்கு விற்கப்படும்.
கடந்த 2016-இல் செப்டம்பர் மாதம் டெல்லியில் ரூ.466.50-ஆக இருந்த மானியமில்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது ரூ.723 -ஆக உள்ளது. மேலும் விமானத்துக்கு பயன்படுத்தப்படும் பெட்ரோல் விலையில் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 1000 லிட்டர் விமான பெட்ரோல் ரூ.2,811 குறைந்து ரூ.51, 248-க்கு விற்கப்படும் என்று இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பெட்ரோல், டீசல் விலையை குறைப்பது போல் குறைத்து தற்போது சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.