திடீரென கே.ஆர்.எஸ் அணையிலிருந்து தண்ணீர் திறப்பை அதிகரித்த கர்நாடகா!
மண்டியா மாவட்டத்திலுள்ள கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து கூடுதல் நீரை கர்நாடகா திறந்துவிட ஆரம்பித்துள்ளது.
பெங்களூர்: கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து கர்நாடகா திடீரென தண்ணீர் திறக்கும் அளவை அதிகரித்துள்ளது. கூடுதல் தண்ணீர் இரு நாட்களில் தமிழகம் வந்து சேர வாய்ப்புள்ளது.
கிருஷ்ணராஜ சாகர் அணையில் இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 274 கன அடியாகவும், வெளியேற்றப்படும் அளவு 6133 கன அடியாகவும் இருந்தது. வழக்கமாக, நீர்வரத்தை விட குறைவான அளவே தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், இன்று திடீரென திறக்கப்படும் நீரின் அளவை கர்நாடகா அதிகரித்துள்ளது.
கூடுதல் நீர் வெளியேற்றம் காரணமாக, தமிழக எல்லையான பிலிகுண்டுலுவிற்கு இன்னும் இரு நாட்களில் கூடுதல் தண்ணீர் வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5 நாட்களுக்கு முன்பு 82.04 அடியாக இருந்த கிருஷ்ணராஜ சாகர் அணை நீர் அளவு தற்போது 79.54 அடியாக உள்ளது.
அதே நேரம் கபினி அணையில் நீர் வரத்து 432 கன அடியாகவும், வெளியேற்றம் 300 கன அடியாகவும் உள்ளது.