கர்நாடக தேர்தலை அச்சுறுத்தும் வானிலை.. 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு.. ஆய்வு மையம் எச்சரிக்கை
பெங்களூரில் பல இடங்களில் இன்றும் நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருக்கிறது.
பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் நடக்க இருக்கும் அதே சமயத்தில் மாநிலத்தின் பல இடங்களில் வரும் மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்து இருக்கிறது.
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. வரும் மே 12ம் தேதி வாக்குப்பதிவும், மே 15ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மொத்தம் 224 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு இடைஞ்சலாக மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தற்போது தென்னிந்தியாவில் கோடை வெயில் வாட்டி எடுக்க தொடங்கி இருக்கிறது. அதே சமயத்தில் எப்போதும் குளிராக கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வந்தது. ஆனால் அவ்வப்போது அங்கே மழையும் பெய்து மக்களை குளிர்வித்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் கர்நாடகாவில் மழை பெய்ய உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. கர்நாடகாவில் ஏப்ரல் இறுதி மற்றும் மே மாத தொடக்கத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறி இருந்தது.
முக்கியமாக தென் கர்நாடகாவில் பகுதிகளில் அதிகமாக மழை பெய்யும் என்று கூறியுள்ளது. அதேபோல் பெங்களூரின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மைசூர், உத்தர கன்னடா, மந்த்யா, ராம்நகரா, குல்பர்கா, ஷிமோகா, உடுப்பி உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்றிலிருந்து மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கர்நாடகாவில் திடீர் என்று பெய்ய இருக்கும் மழை தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தலாம். இதனால் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை ககுறைந்து, வாக்கு அளித்தவர்களின் சதவிகிதம் குறைய வாய்ப்புள்ளது. முக்கியமாக இது தேர்தல் முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும்.