திடீர் தொழில்நுட்ப கோளாறு.. கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. எப்போ விண்ணில் பாயும்?
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: நாடே ஆவலுடன் எதிர்பார்த்த சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக கடைசி நேரத்தில் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவது குறித்து முடிவெடுக்க 10 நாட்களுக்கு மேலாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
திடீரென ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து முழுமையாக ஆராய, ராக்கெட்டை மீண்டும் சோதனை தளத்திற்கு எடுத்து சென்று சோதிக்க வேண்டும். அதன் பின்னரே எதனால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது என்பது தெரிய வரும் என இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர் கூறியுள்ளார்.
சந்திராயன் 2 விண்கலம் ஏவப்படுவது கடைசி நேரத்தில் திடீரனெ நிறுத்தப்பட்டது. நிலவின் தென்துருவத்தை ஆராய செல்லும் முதல் விண்கலம் என்ற பெருமையை பெற்றுள்ளது சந்திராயன் 2.
நிலவின் தென்துருவத்தில் சந்திராயன் 2 விண்கலத்தை இறக்கி, வரலாற்று சாதனை படைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டது இஸ்ரோ. சந்திராயன் 2 விண்கலத்தை ஏவுவதற்காக நேற்று காலை 20 மணி நேர கவுண்டவுன் துவங்கியது.
சந்திராயன் 2 நிறுத்தப்பட்ட விவகாரம்.. இஸ்ரோவின் முடிவு மிகச்சரி.. டிஆர்டிஓ முன்னாள் இயக்குநர்
ஆனால் கிரையோஜெனிக் நிலையில் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்திராயன் 2 விண்கலத்தை ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.
இந்நிலையில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ள இஸ்ரோ மூத்த விஞ்ஞானி ஒருவர், முதலில் ராக்கெட்டில் கிரையோஜெனிக் நிலையில் கோளாறு ஏற்பட்டது எதனால் என்பது முழுமையாக ஆராயப்படும்.
இதற்காக ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் தற்போதைய நிலையிலிருந்து முழுமையாக திரும்ப பெறப்படும். இதற்காக ராக்கெட்டில் நிரப்பப்பட்ட எரிபொருளானது முழுமையாக காலி செய்யப்படும்.
பின்னர் ராக்கெட்டை ஆய்வகத்திற்கு எடுத்து சென்று முழு ஆய்வு மற்றும் பரிசோதனை செய்யப்படும். இதற்கு குறைந்தபட்சம் 10 நாட்களாவது ஆகும். ராக்கெட்டை முழுசோதனைக்கு உட்படுத்திய பின்னரே, சந்திராயன் 2 விண்கலைத்தை எப்போது ஏவுவது என முடிவெடுக்கப்படும் என்று இஸ்ரோ மூத்த விஞ்ஞானி கூறியுள்ளார்.