திடீரென நிறுத்தப்பட்ட சந்திராயன் 2.. இஸ்ரோ விஞ்ஞானிகள் நிச்சயம் சாதிப்பர்.. மக்கள் கருத்து
Recommended Video
ஸ்ரீஹரிகோட்டா: சந்திராயன் 2 விண்கலத்தை நிலவுக்கு செலுத்தும் திட்டத்தை இஸ்ரோ திடீரென நிறுத்தி வைத்ததால், வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வை நேரில் காண வந்திருந்த பார்வையாளர்கள் மிகுந்த ஏமாற்றமடைந்தனர்.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் முதல் முறையாக 5,000 பார்வையாளர்கள் அமர்ந்து சந்திராயன் 2 விண்ணில் ஏவப்படுவதை பார்க்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
வரலாற்று சிறப்பு மிக்க சந்திராயன் 2 விண்ணில் பாய்வதை பார்க்க காசி முதல் கன்னியாகுமரி வரை, பல இடங்களில் இருந்தும் 5,000 பார்வையாளர்கள் குவிந்தனர். சந்திராயன் 2-வை விண்ணில் ஏவ சரியாக 56 நிமிடங்கள் 24 நொடிகள் இருக்கும் போது, கவுண்டவுன் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் சந்திராயன் 2 ஏவுவது தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்தது இஸ்ரோ.
இதனால் சந்திராயன் 2 விண்ணில் பாய்வதை நேரில் காணும் ஆவலில் காத்திருந்த 5,000 பார்வையாளர்கள் இஸ்ரோவின் திடீர் அறிவிப்பால் ஏமாற்றமடைந்தனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த பார்வையாளர்கள், கிரையோஜெனிக் நிலையில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சந்தியாரன் 2 விண்ணில் ஏவப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மிகுந்த ஏமாற்றம் ஏற்பட்டதாக கூறினர்.
மிகப்பெரிய சாதனையை நேரில் பார்க்க காத்திருந்த தங்களுக்கு கடைசி நேர மாறுதல், எதிர்பாராத ஏமாற்றத்தை தந்துள்ளதாக குறிப்பிட்டனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரூ.1,000 கோடி மதிப்பிலான சந்திராயன் 2 -வை விண்ணில் ஏவி அபாய முயற்சியை எடுக்காதது நல்லது தான் என்றும் பார்வையாளர்கள் கூறினர். எனினும் சந்திராயன் 2 திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்று அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
உலக அரங்கில் இந்தியாவின் மதிப்பை உயர்த்தும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதிப்பார்கள் என்றும் பார்வையாளர்கள் குறிப்பிட்டனர்.