ஓடியாங்க.. போனா வராது, பொழுது போனா கிடைக்காது.. உ.பி. முதல்வர் யோகியின் அரிய 'கண்டுபிடிப்பு'
டெல்லி: கரும்பு அதிகம் பயிரிடுவதால் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாக்பட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசுகையில்தான் இவ்வாறு ஒரு சர்ச்சை கருத்தை முன் வைத்தார். ஆராய்ச்சிகள் எதுவுமே இப்படி நேரடி தொடர்பு உள்ளதாக கூறாத போது, யோகி ஆதித்யநாத் அப்படி சர்க்கரை நோய் பற்றி என்னதான் பேசினார் என்கிறீர்களா? நீங்களே பாருங்கள்.
சர்க்கரை நோய்
தற்போது விவசாயிகள், அதிகளவில் கரும்பு உற்பத்தி செய்கின்றனர். கரும்பு ஒன்றை மட்டுமே பயிரிடும் விவசாயிகள் காய்கறிகள் போன்ற மாற்று பயிர்களில் கவனம் செலுத்த வேண்டும். காய்கறிகளுக்கு டெல்லியில் நல்ல மார்க்கெட் உள்ளது. அதிகளவிலான கரும்பு உற்பத்தி செய்யும் போது, அது அதிக கொள்முதலுக்கு வழிவகை செய்கிறது. மக்கள் அதிக அளவுக்கு சர்க்கரையை சாப்பிட வேண்டிய தேவை எழுகிறது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்.
பணம் கொடுக்கப்படும்
மேலும், கரும்பு விவசாயிகளுக்கும் நிலுவையில் உள்ள 10 ஆயிரம் கோடி விரைவில் மில்களால் வழங்கப்படும். அவ்வாறு ஆலைகள் பாக்கி தொகையை அக்டோபர் 15ம் தேதிக்குள் வழங்காவிட்டால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். பாக்கி பணத்தை செலுத்துவதற்கான அனைத்து பணிகளையும், மேற்கொண்டுள்ளோம். இதுவரை பாஜக அரசு அமைந்த பிறகு 26,000 கோடி கரும்பு நிலுவை தொகையை விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்துள்ளோம். எஞ்சிய பாக்கி தொகையையும் கண்டிப்பாக பெற்றுக்கொடுப்போம். இவ்வாறு, யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
இந்தியாவில் சர்க்கரை நோய்
மத்திய அரசின் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில், இந்தியாவிலுள்ள 130 கோடி மக்களில், சுமார் 6 கோடி பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதில் 3 கோடி பேருக்கு சர்க்கரை நோய் இருப்பது தெரியாது, அல்லது தெரிந்தாலும் சிகிச்சை பெறாதவர்களாக இருக்கிறார்கள். இதனால் உடல் நல பாதிப்பும் அதிகமாகிவிடுகிறது.
பொருளாதார பிரச்சினை
சர்க்கரை நோய் உடல் சார்ந்த பிரச்சினை மட்டுமல்ல, பொருளாதாரம் சார்ந்த பிரச்சினை. உடல்நலம் பேணுதல், உற்பத்தி திறன் பாதிப்பு, உறுப்பு குறைபாடு போன்றவற்றின் மூலமாக பொருளாதார பிரச்சினைகளுக்கும் சர்க்கரை நோய் காரணமாகிவிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் கரும்பு விவசாயம்
இந்தியாவிலேயே அதிகமாக கரும்பு விவசாயம் நடப்பது மகாராஷ்டிராவில். அங்கு 9.4 லட்சம் ஹெக்டேரில் உற்பத்தி நடக்கிறது. இதைத்தொடர்ந்து தமிழகம் 2வது இடத்திலும், உததர பிரதேசம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.