சித்துவை குரங்குடன் ஒப்பிட்ட அகாலி தள தலைவர் சுக்பீர் சிங் பாதல்!
முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜாத் சிங் சித்துவை சிரோமணி அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல் குரங்குடன் ஒப்பிட்டு பேசினார்.
அமிருதசரஸ்: முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான நவ்ஜாத் சிங் சித்துவை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம் செய்தார் அகாலி தளம் தலைவர் சுக்பீர் சிங் பாதல்.
ஆனந்தபூர் சாஹிபின் விராசாத்- இ- கால்சா மியூசியம் கடந்த அகாலி தளம் அரசால் கட்டப்பட்ட நிலையில் அது யாருக்கும் எவ்வித பயனும் அளிக்கவில்லை. ஆனால் அதற்கான பராமரிப்பு கட்டணம் ரூ. 12 கோடியை ஆண்டுதோறும் செலுத்தி வருகிறது என்று கடந்த ஆண்டு நவ்ஜாத் சித்து விமர்சனம் செய்திருந்தார்.
இந்நிலையில் இதுகுறித்து சிரோமணி அகாலிதளம் கட்சியின் தலைவரும் முன்னாள் பஞ்சாப் மாநில துணை முதல்வருமான சுக்பீர் சிங் பாதல் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் குரங்கு போல் முக அமைப்பை கொண்ட நவ்ஜாத் சித்து சீக்கிய நினைவுச்சின்னங்களை பயனற்றவை என்று கூறியுள்ளார்.
அப்படி என்றால் சீக்கியர்களின் வரலாற்றை பறைச்சாற்றும் விராசாத் - இ-கால்சாவை சித்து தேவையற்றது என்கிறாரா என்று பாதல் கேள்வி எழுப்பியுள்ளார். சித்துவை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்த பாதலின் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.