விமானத்தில் இருந்து பாயும் பிரமோஸ் ஏவுகணை சோதனை!
பெங்களூரு: 300 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும், பிரம்மோஸ் ஏவுகணையை, எச்.ஏ.எல் விரைவில் சோதித்து பார்க்க உள்ளது என்று அந்த அமைப்பின் தலைவர் தியாகி 'ஒன்இந்தியாவிடம்' தெரிவித்தார்.
விமானத்தில் இருந்து வீசப்பட உள்ள இந்த ஏவுகணை திட்டத்தை எச்ஏஎல் இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையேற்று உருவாக்கியுள்ளார். எஸ்யூ-30எம்கேஐ, வகை விமானத்தில், சில மாற்றங்களை செய்து, இந்த ஏவுகணையை அதில் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வரும் மார்ச் மாதம் முதல் முறையாக விமானத்தில் இருந்து, பிரம்மோஸ் ஏவுகணை சோதனை நடத்திப் பார்க்கப்பட உள்ளது. இந்திய விமானப் படையின் மிக முக்கியமான போர் விமானங்களான சுகோய் போர் விமானங்களில் பிரமோஸ் ஏவுகணையை ஏந்திச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ரஷ்ய தயாரிப்பான இந்த விமானங்களில் இந்திய-ரஷ்ய கூட்டுத் தயாரிப்பான பிரமோஸ் ரக ஏவுகணையையும் ஏந்திச் செல்லும் வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான முக்கியமான தரை அதிர்வு சோதனை (Ground Vibration Test- GVT) வெற்றிகரமாக செய்து பார்க்கப்பட்டிருந்தது.
ரஷ்யாவின் தொழில்நுட்பத்துடன் இணைந்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிட்டெட் (ஹெச்.ஏ.எல் ) தயாரித்துள்ள ஐந்தாம் தலைமுறை போர் விமானம் சுகோய். பல வகையானன ஏவுகணைகளையும் எடுத்துச் சென்று எதிரிகளின் இலக்கில் வீசக் கூடிய வல்லமை மிக்கது இந்த விமானம்.
இதே போல இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாக தயாரித்துள்ளது தான் பிரமோஸ் ஏவுகணை. இந்த ஏவுகணைகளை தரையிலிருந்தும், கப்பல்கள்- நீர்மூழ்கிகளில் இருந்தும் ஏவ முடியும்.
இந் நிலையில் இதை போர் விமானங்களிலும், குறிப்பாக, சுகோய் எஸ்யூ-30 எம்கேஐ ரக விமானங்களிலும் பயன்படுத்தும் வகையில் இப்போது மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த சோதனைகள் ஹெச்ஏஎல் நிறுவனத்தின் தர ஆய்வு நிபுணர்கள், இந்திய விமானப்படை அதிகாரிகளின் முன்னிலையில் சுகோய் போர் விமானத்தில் சமீபத்தில் செய்யப்பட்டன என்பது குறிப்படித்தக்கது.