கோடை விடுமுறை: திருப்பதியில் குவிந்த கூட்டம்… ஒரே நாளில் ரூ.2.21 கோடி வசூல்
திருப்பதி: கோடைவிடுமுறை காரணமாக திருப்பதி ஏழுமலையானைக் காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். 24 மணிநேரம் காத்திருந்து இறைவனை தரிசித்து செல்கின்றனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 2.21 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது.
திருமலை ஏழுமலையானைக் காண தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை, பிரம்மோற்சவம் போன்ற தினங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்.
தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் திருப்பதி கோவிலில் தற்போது பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்த வண்ணம் உள்ளனர்.
24 மணிநேரம் காத்திருப்பு
தர்ம தரிசனத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 20 முதல் 24 மணி நேரம் ஆகிறது. அவர்கள் 31 கம்பார்ட்மெண்ட்களில் காத்திருக்கிறார்கள். அதற்கு வெளியேயும் 2 கி.மீ. தூரத்துக்கு பக்தர்கள் நீண்ட வரிசையில் நிற்கிறார்கள்.
பாதையாத்திரை பக்தர்கள்
கால்நடையாக வரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 14 மணி நேரம் ஆகிறது. 13 கம்பார்ட்மெண்ட்களில் அவர்கள் காத்திருக்கிறார்கள். 300 ரூபாய் கட்டணத்தில் சாமி தரிசனம் செய்ய 6 மணி நேரம் ஆகிறது.
தங்க இடமில்லை
கூட்டம் அதிகமாக இருப்பதால் தங்கும் விடுதிகளில் அறைகள் கிடைக்காமல் பக்தர்கள் அவதிப்படுகிறார்கள். அறை எடுக்க 5 மணி நேரம் காத்திருக்கின்றனர். அப்படி இருந்தும் தங்கும் அறை கிடைக்காமல் ஆங்காங்கே உள்ள இடங்களில் இரவில் பக்தர்கள் போர்வையை விரித்து தூங்குகிறார்கள்.
எங்கும் வரிசைதான்...
லாக்கரில் பொருட்களை வைக்க 2 மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. செருப்பு வைக்கவும் நீண்ட வரிசை உள்ளது. தலைமுடி காணிக்கை செலுத்த 3 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ரூ.2.21 கோடி
நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.2.21 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளது. இன்றும், நாளையும் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தண்ணீர் தட்டுப்பாடு அபாயம்
திருமலையில் தண்ணீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. அங்குள்ள நீர்த்தேக்கங்களில் இன்னும் 106 நாட்களுக்கு தேவையான தண்ணீரே இருப்பில் உள்ளது. இதனால் தண்ணீரை சிக்கனமாக செலவழிக்குமாறு தேவஸ்தானம் வேண்டுகோள் விடுத்துள்ளது.