கலாநிதி, தயாநிதி மாறனின் ரூ742 கோடி சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனு!
டெல்லி: சன் டிவி குழுமத்தின் அதிபர் கலாநிதி மற்றும் அவரது சகோதரர் தயாநிதி மாறன் ஆகியோரது ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கப் பிரிவு முடக்கியதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அந்நிறுவனம் சார்பாக மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
வெளிநாடு வாழ் இந்தியரான சிவசங்கரனுக்கு சொந்தமாக இருந்தது ஏர்செல் நிறுவனம். இந்த நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றாக வேண்டும் என்று மத்திய அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் 2006ஆம் ஆண்டு நெருகக்டி கொடுத்தார் என சி.பி.ஐ.யிடம் புகார் செய்தார் சிவசங்கரன்.
இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ. இதனை விசாரித்தது. அப்போது, ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்தத்தை செய்து முடித்ததற்கு பிரதிபலனாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.டி.எச் நிறுவனத்தில் மேக்ஸிஸ் நிறுவனம் முதலீடு செய்ததாகவும் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
SUN TV files petition in SC challenging ED's move of attaching its property in a Prevention of Money Laundering Act(PMLA) case
— ANI (@ANI_news) July 2, 2015
இதேபோல் சட்டவிரோத தொலைபேசி இணைப்பகம் நடத்தியதாக தயாநிதி மாறன் மீதும் சன் டிவி மீதும் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் தயாநிதி மாறனிடம் சி.பி.ஐ. கடந்த 2 நாட்களாக விசாரணை நடத்தி வருகிறது. சி.பி.ஐ. மட்டுமல்லாது அன்னிய செலாவணி மோசடி பிரிவுகளின் கீழ் அமலாக்கப் பிரிவும் வழக்கு பதிவு செய்தது.
இதனிடையே கலாநிதி, தயாநிதி ஆகியோருக்கு சொந்தமான சன் டிவி இடம் உட்பட ரூ. 742 கோடி சொத்துகளை கடந்த மார்ச் மாதம் அமலாக்கத் துறை முடக்கியது.
இதை எதிர்த்து சன் டிவி நிர்வாகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எம். சத்தியநாராயணன் கடந்த மாதம் தள்ளுபடி செய்தார்.
இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில், தங்களது சொத்துகள் முடக்கத்தை எதிர்த்து சன் டிவி சார்பாக இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.