சுனந்தா கொலை வழக்கில் சசி தரூருக்கு உண்மையை கண்டிறியும் பாலிகிராப் சோதனை?
டெல்லி: சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கு பாலிகிராப் சோதனை செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றின் அறையில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. டெல்லி போலீசார் தற்கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அது கொலை வழக்காக மாற்றப்பட்டது.
அவருக்கு கதிர்வீச்சு தன்மை உள்ள பொலோனியம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இது தொடர்பாக சசி தரூரிடம் டெல்லி போலீசார் 3 முறை விசாரணை நடத்தினர். இதற்கிடையே சுனந்தாவின் உடற்கூறுகள் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் சுனந்தா கதிரியக்க விஷத்தால் கொலை செய்யப்படவில்லை என்று எப்.பி.ஐ. தெரிவித்துள்ளது. ஆனால் சுனந்தா எந்த வகையான விஷத்தால் இறந்தார் என்பதை தெரிவிக்க டெல்லி போலீசார் மறுத்துவிட்டனர்.
சுனந்தா வழக்கு தொடர்பாக சசி தரூருக்கு உண்மையை கண்டறியும் பாலிகிராப் சோதனை செய்யப்படக்கூடும் என்று கூறப்படுகிறது. அவருக்கு பாலிகிராப் சோதனை நடத்த போலீசார் டெல்லி நீதிமன்றத்திடம் விரைவில் அனுமதி கோர உள்ளனராம்.
முன்னதாக போலீசார் சுனந்தா விவகாரம் தொடர்பாக தரூரின் வீட்டு வேலையாள் நாராயண் சிங், டிரைவர் பஜ்ரங்கி உள்பட 6 பேருக்கு பாலிகிராப் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.