சுனந்தா வழக்கில் ஒன்னுமே புரியல: மருத்துவ குழுவை அமைக்க டெல்லி போலீஸ் கோரிக்கை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு டெல்லி போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014ம் ஆண்டு ஜனவரி மாதம் தெற்கு டெல்லியில் உள்ள ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுனந்தா தற்கொலை செய்து கொண்டதாக டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
பின்னர் அந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். சுனந்தாவின் உடற்கூறுகள் அமெரிக்காவில் உள்ள எப்.பி.ஐ. ஆய்வகத்திற்கு அனுப்பி அறிக்கை பெறப்பட்டது. சுனந்தா ஆல்பிராக்ஸ் என்ற மருந்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டதால் இறந்தார் என எப்.பி.ஐ. அறிக்கை அளித்தது. அதை வைத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையும் தனது கருத்தை தெரிவித்தது.
முன்னதாக சுனந்தா கதிர்வீச்சு தன்மை உள்ள பொருளால் இறந்தார் என்று கூறப்பட்டது. சுனந்தா கொலை வழக்கில் டெல்லி போலீசார் சசி தரூரிடம் இதுவரை 3 முறை விசாரணை நடத்தியுள்ளனர்.
எய்ம்ஸ் மருத்துவமனை அளித்துள்ள அறிக்கையை வைத்து எந்த முடிவுக்கும் வர முடியாமல் உள்ளது சிறப்பு விசாரணை குழு. இந்நிலையில் சுனந்தா புஷ்கரின் மருத்துவ அறிக்கைகளை ஆய்வு செய்ய மருத்துவ குழு ஒன்றை அமைக்க சுகாதார சேவைகளின் டைரக்டர் ஜெனரலுக்கு சிறப்பு விசாரணை குழு கடிதம் எழுதியுள்ளது.
முன்னதாக சிறப்பு விசாரணை குழு சுனந்தாவின் அறிக்கை குறித்து விளக்கம் கேட்டு எய்ம்ஸ் மருத்துவ குழுவுக்கு கடிதம் எழுதியும் இதுவரை பதில் இல்லை.