சூடு பிடிக்கும் சுனந்தா கொலை வழக்கு – சாட்சிகளை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த மனு
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலைவழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 3 சாட்சிகளின் மீது சந்தேகப் பார்வையை திருப்பியுள்ள டெல்லி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார், அவர்களை உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
சசி தரூரின், நண்பர் சஞ்சய் திவான், உதவியாளர் நாராயண் சிங், ஓட்டுனர் பஜ்ரங்கி ஆகியோரின் சாட்சியில் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் போலீசார் கூறியுள்ளனர். இந்த 3 பேருக்கும், சுனந்தா புஷ்கரின் மரணத்திற்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்புவதால், பாலிகிராஃப் எனப்படும் உண்மை கண்டறியும் சோதனைக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் டெல்லி போலீசார் கூறியுள்ளனர்.
சுனந்தா புஷ்கர் கொலை
சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ஆம்தேதி தெற்கு டெல்லியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டல் அறையில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். சந்தேகத்துக்கு இடமான அவரது மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுனந்தா முதலில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. அதனடிப்படையில் இந்த வழக்கு விசாரணையை போலீசார் நடத்தி வந்தனர்.
சிறப்பு புலனாய்வு பிரிவு
இதற்கிடையே இந்த வழக்கு பற்றி சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்தனர். அதன்பின்னர் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
விசாரணை தீவிரம்
இந்த கொலை தொடர்பாக சசி தரூர் மட்டுமின்றி, அவரது டிரைவர் பஜ்ரங்கி, வீட்டு வேலைக்காரர் நரேன்சிங், அவரது நண்பர் சஞ்சய் தேவன், அவரது நேர்முக உதவியாளர் பிரவீண் குமார், ரஜத் மோகன் ஆகியோரிடமும் போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தியுள்ளனர்.
சாட்சிகளின் மீது சந்தேகம்
இதனிடையே நரேன்சிங், நண்பர் சஞ்சய் தேவன், டிரைவர் பஜ்ரங்கி ஆகியோர் கூறிய சாட்சியங்களில் நம்பகத்தன்மை மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
மவுனம் சாதிக்கும் சாட்சிகள்
இவர்கள் மூவருக்கும் நிறைய தகவல்கள் தெரிந்துள்ளது. எனினும் அவர்கள் முக்கிய விசயங்களை மறைத்து மவுனம் சாதிப்பதாகவும் டெல்லி காவல்துறையைச் சேர்ந்த உயரதிகாரி ஒருவர் நமது ஒன் இந்தியா செய்தியாளரிடம் கூறியுள்ளார்.
சுனந்தா - சசிதரூர்
சுனந்தா - சசிதரூர் இடையேயான உறவில் இருந்த பிரச்சினை என்ன என்பது பற்றி இவர்கள் மூவருக்குமே தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது என்று கூறும் போலீசார், தனது கணவரைப் பற்றி ஊடகங்களில் தெரிவிக்க முயன்றது என்ன? பாகிஸ்தான் ஊடகவியலாளர் மெகர் தரார் மற்றும் சசிகபூர் இடையேயான உறவுமுறை எப்படிப்பட்டது என்பது பற்றியும் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தவறான தகவல்கள்
இதில் வேலைக்காரர் நரேன்சிங், நண்பர் சஞ்சய் தேவன், டிரைவர் பஜ்ரங்கி ஆகிய மூவரும் போலீசாருக்கு தவறான தகவல்களை அளித்து வழக்கை திசை திருப்ப முயலுகின்றனர் என்பது போலீசாரின் சந்தேகமாகும்.
ஹோட்டலில் தங்கியது ஏன்?
லோதி கார்டன் பகுதியில் உள்ள வீட்டிற்கு போகாமல் சுனந்தா ஹோட்டலில் தங்கியது ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை. இதற்கு பதிலளித்த பணியாளர், வீட்டில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்ததாக கூறியுள்ளார். ஆனால் சுனந்தா ஊரில் இருந்து திரும்பும் முன்னதாகவே பராமரிப்பு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது தெரியவந்துள்ளது.
மூடி மறைக்க முயற்சி
சுனந்தாவின் மரணத்தை மூடி மறைக்க முயற்சிப்பதாகவும், பல்வேறு முரண்பாடுகள் பற்றிய கேள்விக்கு சரியான பதிலை அளிக்க மறுப்பதாகவும் இம்மூவர் மீதும் டெல்லி போலீசார் குற்றஞ்சாட்டியுள்ளனர் சுனந்தாவின் மரணத்திற்கான காரணம் கண்டிப்பாக இம்மூவருக்கும் தெரியும் என்று உறுதிபட கூறியுள்ளனர்.
மின்தடை ஏற்பட்டது ஏன்
சம்பவம் நடந்த தினத்தன்று சுனந்தா தங்கியிருந்த அறை எண் 345ல் இரவு 7 மணிக்கு ஏன் மின்தடை ஏற்பட்டது என்ற கேள்விக்கு மூவருமே அமைதியாக இருந்ததாக கூறியுள்ளது. மின்தடைக்கு பின்னர் தான் சுனந்தா மரணம் குறித்த செய்தி வெளியே கசிந்தது. அப்போது சசிதரூருடன் இம்மூவர் தான் உடனிருந்தனர்.
தகவல்கள் அளிப்பு
அதேபோல சுனந்தாவின் செல்போன், லேப்டாப் ஆகியவைகளில் இருந்த முக்கிய தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளன. இது எப்படி நடந்தது என்பது குறித்தும் அந்த மூவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளதாக புலனாய்வுப் பிரிவு போலீசார் கூறியுள்ளனர்.
செய்தியாளர்கள் சந்திப்பு
சுனந்தா தனது நண்பர்களிடமும், தோழிகளிடமும் செய்தியாளர்களை சந்திக்கப் போவதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் கூற விரும்பியது என்ன என்பதும் போலீசார் எழுப்பும் கேள்வியாகும். இதன் காரணமாகவே சுனந்தா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் நம்பும் போலீசார், கொலை வழக்கு விசாரணையை வேறு கோணத்தில் அணுக முடிவு செய்துள்ளனர்.
உண்மை கண்டறியும் சோதனை
இதனால் அம்மூவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றத்தில் புலனாய்வு பிரிவு போலீசார் அனுமதி கோரியுள்ளனர். இதையடுத்து இம்மூவரையும் வரும் 20ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா சம்மன் அனுப்பியுள்ளார். சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு மீண்டும் சூடுபிடித்துள்ளதால் டெல்லி அரசியல் வட்டாரங்களில் மீண்டும் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.