15ம் தேதி அழுது கொண்டே தனியாக ஹோட்டலுக்கு வந்த சுனந்தா: சமாதானம் செய்த ஊழியர்கள்
டெல்லி: கடந்த 15ம் தேதி மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா அழுது கொண்டே தனியாக டெல்லி லீலா பேலஸ் ஹோட்டலுக்கு வந்துள்ளார். அவரை ஹோட்டல் ஊழியர்கள் தான் சமாதானம் செய்துள்ளனர்.
மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 17ம் தேதி இரவு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் அறை எண் 345ல் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முன்னதாக அவர் கடந்த 15ம் தேதி தனது கணவருடன் திருவனந்தபுரத்தில் இருந்து டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லியில் இறங்கிய அவர் அழுது கொண்டே தனியாக லீலா பேலஸ் ஹோட்டலுக்கு முன்பதிவு எதுவும் செய்யாமல் வந்துள்ளார்.
அவரை சமாதானப்படுத்திய ஹோட்டல் ஊழியர்கள் அவருக்கு அறை எண் 345-ஐ ஒதுக்கியுள்ளனர். பின்னர் வந்த தரூர் வேறு அறையில் தங்கியுள்ளார். சுனந்தா 16ம் தேதி முழுவதும் அறையை விட்டு வெளியே வரவே இல்லை. அன்றைக்கு அவர் கிச்சடி மட்டுமே ஆர்டர் செய்துள்ளார். மறுநாள் அதாவது 17ம் தேதி அன்னாச்சிப் பழம் மற்றும் இளநீர் ஆர்டர் செய்துள்ளார்.
பிரேத பரிசோதனையில் சுனந்தாவின் உடலில் காயம் இருந்ததை மருத்துவர்கள் பார்த்துள்ளனர். ஆனால் எங்கெங்கு காயம் இருந்தது என்பதை அவர்கள் வெளியிடவில்லை.
சுனந்தா மன அழுத்தத்திற்கான மாத்திரைகளை அதிக அளவில் எடுத்திருந்தது அவரது மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர்.