சுனந்தா கொலை வழக்கில் சசி தரூருக்கு 'உண்மை கண்டறியும் டெஸ்ட்' எடுக்கும் டெல்லி போலீஸ்
டெல்லி: சுனந்தா புஷ்கர் கொலை வழக்கு தொடர்பாக டெல்லி போலீசார் முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரை உண்மையை கண்டறியும் பாலிகிராப் சோதனைக்கு வருமாறு அழைக்க உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவியும், தொழில் அதிபருமான சுனந்தா புஷ்கர் டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதலில் தற்கொலை என்று நினைக்கப்பட்ட வழக்கு பின்னர் கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இது குறித்து டெல்லி போலீசார் சசி தரூர், அவர் வீட்டு பணியாள் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். தனக்கும், சுனந்தாவுக்கும் இடையே எந்த பிரச்சனையும் இல்லை என்று தரூர் விசாரணையில் தெரிவித்தார்.
இந்நிலையில் உண்மையை கண்டறிய சசி தரூரை பாலிகிராப் சோதனை செய்ய வருமாறு டெல்லி போலீசார் அவரை கேட்டுக் கொள்ள உள்ளனர். பாலிகிராப் சோதனை செய்கையில் முன்பு சசி தரூரிடம் கேட்ட அதே கேள்விகளை கேட்க போலீசார் தீர்மானித்துள்ளனர்.
தரூர் முன்பு நடத்தப்பட்ட விசாரணையின்போது உண்மையைத் தான் தெரிவித்தாரா என்பதை கண்டறியவே பாலிகிராப் சோதனையின்போது ஏற்கனவே கேட்ட கேள்விகளை போலீசார் கேட்க உள்ளனர். முன்னதாக போலீசார் தரூரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை மணிக்கணக்கில் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.