சுனந்தா கொலை: சசிதரூர் ஓட்டுநர் உட்பட மூவருக்கு உண்மை கண்டறியும் சோதனை- டெல்லி கோர்ட் அனுமதி!
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தரூரின் ஓட்டுநர் உட்பட மூவருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த டெல்லி நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் மர்ம மரணம் தொடர்பான வழக்கில் சசிதரூரின் ஓட்டுநர் உள்பட மூன்று பேர் பொய் சொல்வதாக டெல்லி சிறப்பு புலனாய்வு குழுவினர் சந்தேகம் எழுப்பியிருந்தனர்.
அதாவது கடந்த 2014 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதியன்று சுனந்தா தங்கியிருந்த அறை எண் 345-ல் இரவு 7 மணிக்கு மின்தடை ஏற்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு 3 பேருமே அமைதியாக இருந்தனர். சுனந்தாவின் உடலில் காயங்கள் எப்படி ஏற்பட்டது? என்பதற்கும் மூவரும் பதிலளிக்கவில்லை.
சுனந்தாவின் மரணத்திற்கு மூல காரணம் என சந்தேகிக்கப்படும், பாகிஸ்தான் செய்தியாளர் மெகர் தரார் - சசிதரூர் ஆகியோருக்கிடையேயான உறவு குறித்து மூவரும் எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.
கடந்த ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதியன்று, சுனந்தா டெல்லி வருவதற்கு முன்பே சசிதரூரின் இல்லத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்துவிட்டன. அப்படியிருக்க சுனந்தா ஏன் வீட்டுக்கு வராமல் ஓட்டலில் தங்கினார்? என்ற கேள்விக்கு பதிலளித்த மூவரும், சீரமைப்பு பணிகள் நடந்ததால் சுனந்தா வீட்டுக்கு வரவில்லை என்று பொய்யான காரணத்தைக் கூறினர். இதன் மூலம் விசாரணையைத் திசை திருப்ப மூவரும் முயற்சித்துள்ளனர்.
ஜனவரி 17ஆம் தேதி நடைபெறும் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சசிதரூரின் சுயரூபத்தை வெளியிடுவேன் என சுனந்தா கூறியது பற்றி கேட்டபோதும் மூவரும் பதிலளிக்கவில்லை.
அதே போல் தரூரின் நண்பரான தேவன் தனது மும்பை பயணத்தை ரத்து செய்துவிட்டு ஏன் சுனந்தா தங்கியிருந்த லீலா ஓட்டலுக்கு வந்தார்? என்ற கேள்விக்கும் உரிய பதில் அளிக்கவில்லை. சுனந்தா தங்கியிருந்த அறை எண் 345-ல் முன்புறம் உள்ள அறையில் இரண்டரை மணி நேரம் அமர்ந்திருந்த போதும், ஏன் ஒருமுறை கூட அவரை எழுப்ப முயற்சிக்கவில்லை? என்ற கேள்விக்கும் தேவன் பதிலளிக்கவில்லை.
சுனந்தா தங்கியிருந்த லீலா ஓட்டலிலேயே பணி மருத்துவர் உள்ள நிலையில், படேல் நகரில் உள்ள மருத்துவர் ரஜத் மோகனை ஏன் அழைத்தீர்கள்? என்ற கேள்விக்கும், சுனந்தாவைச் சந்திக்காமலேயே மருத்துவர் ரஜத்தை அழைத்து வருமாறு டிரைவரை ஏன் அனுப்பினீர்கள் என்ற கேள்விக்கும் தேவன் பதிலளிக்கவில்லை.
இதனால் சசிதரூரின் வீட்டு உதவியாளர் நரெய்ன் சிங், ஓட்டுநர் பஜ்ரங்கி மற்றும் தரூரின் நண்பர் சஞ்சய் தேவன் ஆகியோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த புலனாய்வுக் குழுவினர் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில் இன்று மூவரும் டெல்லி மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி சுனில் குமார் சர்மா முன் ஆஜரானார்கள். அப்போது உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்திக்கொள்ள மூவரும் சம்மதித்தனர். இதனையடுத்து உண்மை கண்டறியும் சோதனை நடத்த போலீசாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.