சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் திருப்பம்.. கதிரியக்க விஷம் இல்லை என்கிறது அமெரிக்க ஆய்வம்
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கொலை வழக்கில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. அவரது உடற்கூறுகளை ஆய்வு செய்த அமெரிக்க ஆய்வகம், கதிரியக்க விஷத்தால் அவர் கொலை செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. எனவே அது என்ன விஷம் என்பதை கண்டறியும் பொறுப்பு சிறப்பு விசாரணை குழுவின் தலைமீது விழுந்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரான சசிதரூர் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் டெல்லி ஹோட்டலில் தங்கியிருந்தபோது மர்மமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து, முதலில் மர்ம சாவு வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர், கொலைவழக்காக அது மாற்றப்பட்டது. சுனந்தா உடலில் விஷம் கலந்திருந்தது பிரேத பரிசோதனையில் தெரியவந்தது. ஆனால் அது என்ன விஷம் என்பதை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வுக்கூடத்தால் கண்டறிய முடியவில்லை.
கதிரியக்கம் ஏற்படுத்தும் விஷம் கலக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில், சுனந்தா உடற்கூறு, வாஷிங்டனிலுள்ள எப்.பி.ஐ ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது. 9 மாதங்களுக்கு பிறகு ஆய்வறிக்கை சீல் செய்யப்பட்ட கவரில் வைத்து டெல்லி போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதில், சுனந்தா விஷம் கொடுக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளார். அவர் சாப்பிட்ட மருந்தில் அளவுக்கு அதிகமான கதிரியக்க தன்மை கொண்ட பொருட்கள் ஏதும் இல்லை. அந்த மருந்துகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவே கதிரியக்க பொருட்கள் கலந்துள்ளன. பொல்லேனியம் என்ற கதிரியக்க வேதிப் பொருள் ஏதும் சுனந்தா சாப்பிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அவர் கொலை செய்யப்பட்டதற்கு பயன்படுத்தப்பட்ட விஷம் எத்தகையது என்பதை அறியும் முயற்சியில் சிறப்பு விசாரணை குழு இறங்கியுள்ளது.