சுனந்தா கொலை வழக்கு: மகனிடம் இன்று டெல்லி போலீஸ் விசாரணை
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கில் அவரின் மகன் ஷிவ் மேனனிடம் டெல்லி போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி டெல்லியில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் பிணமாகக் கிடந்தார். அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று கருதப்பட்டது. இந்நிலையில் அவர் விஷம் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் கமிஷனர் பஸ்ஸி அண்மையில் தெரிவித்தார்.
இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து பலரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீசார் சசி தரூரிடம் சுனந்தா வழக்கு குறித்து 4 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்நிலையில் சுனந்தாவின் மகன் ஷிவ் மேனனிடம் போலீசார் இன்று விசாரணை நடத்த உள்ளனர்.
சுனந்தாவின் மூன்றாவது கணவர் தான் தரூர். சுனந்தாவின் இரண்டாவது கணவர் மூலம் பிறந்தவர் ஷிவ் மேனன்.
தனக்கும் சுனந்தாவுக்கும் இடையே பிரச்சனை இல்லை, எப்போதாவது தகராறு ஏற்பட்டிருக்கலாம் என்று தரூர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர்கள் இருவருக்கும் இடையே பலநேரங்களில் கடும் மோதல் நடந்ததை பலர் பார்த்துள்ளனர்.
தரூருக்கும், சுனந்தாவுக்கும் இடையே இருந்த பிரச்சனை பற்றி ஷிவ் மேனனிடம் போலீசார் விசாரிக்க உள்ளனர். தன்னை யாராவது மிரட்டியது அல்லது ஐபிஎல் விவகாரம் பற்றி சுனந்தா ஷிவ் மேனனிடம் எதுவும் தெரிவித்தாரா என்பது பற்றியும் போலீசார் விசாரிக்க உள்ளனர்.