இறப்பதற்கு முன்பு சுனந்தா கை நிறைய மாத்திரைகளை சாப்பிட்டார், உளறித் தள்ளினார்: நண்பர்
டெல்லி: இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பு முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா ஆல்பிராக்ஸ் உள்பட கைநிறைய மாத்திரைகளை சாப்பிட்டு வந்தார். மேலும் முன்னாள் அமெரிக்க அதிபர் புஷ் மற்றும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக அவர் உளறினார் என்று அவருக்கு நெருக்கமான நண்பர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூரின் மனைவி சுனந்தா கொலை வழக்கு தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் சுனந்தா உடலில் ஆல்பிராக்ஸ் இல்லை என்று தெரிய வந்துள்ளது. ஆனால் அவர் தூக்கமின்மையால் தவித்ததாகவும், ஆல்பிராக்ஸ் எடுத்துக் கொண்டதாகவும் தரூர் தெரிவித்தார்.
இந்நிலையில் சுனந்தாவின் நெருங்கிய நண்பரான தேஜ் சராப்(77) இது குறித்து செய்தி தொலைக்காட்சி சேனல் ஒன்றிடம் கூறுகையில்,
சுனந்தா
2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் அதாவது அவர் இறப்பதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு அவரும், அவரது கணவரும் எனது கோவா வீட்டுக்கு வந்தனர்.
மயக்கம்
சுனந்தா சரியாக சாப்பிடவில்லை, தூங்கவில்லை. அவர் கடற்கரையில் ஒரு முறை, படகில் ஒரு முறை என்று 2 தடவை மயங்கி விழுந்தார்.
ஆல்பிராக்ஸ்
சுனந்தா கை நிறைய மாத்திரைகளை எடுத்து சாப்பிட்டார். எதற்கு என்று கேட்டதற்கு நான் சரியாகத் தூங்குவது இல்லை. நான் தூங்கி பல ஆண்டுகளாகிவிட்டது. அதனால் நான் ஆல்பிராக்ஸ் மற்றும் வலி நிவாரணிகளை எடுத்து வருகிறேன் என்றார். இது உடல்நலத்திற்கு மிகவும் கேடு என்று நான் அவரிடம் கூறினேன்.
புஷ், மன்மோகன்
சுனந்தா ஏதோ வித்தியாசமாக நடந்து கொண்டார். சம்பந்தமே இல்லாமல் முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் தன்னிடம் ஆலோசனை கேட்டு நடப்பதாக சுனந்தா உளறினார் என்றார் சராப்.
மருத்துவர்கள்
இறப்பதற்கு முன்பு சுனந்தா ஆரோக்கியமாக இருந்ததாகவும், அவர் எந்த நோய்க்காகவும் மருந்துகள் எடுத்துக் கொள்ளவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.