ஜெர்மனி அகதிகள் முகாமில் மகளுடன் சிக்கிய இந்தியப்பெண்... பத்திரமாக மீட்பு... டெல்லி வந்தடைந்தார்!
டெல்லி: கணவர் வீட்டாரின் சதியால் ஜெர்மனி அகதிகள் முகாமில் குழந்தையுடன் தங்கியிருந்த பெண், இந்திய வெளியுறவுத்துறையின் முயற்சியால் பத்திரமாக மீட்கப்பட்டு, டெல்லி வந்தடைந்தார்.
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் கர்பிரீட் என்ற பெண்மணி சமீபத்தில் தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்து வெளியிட்டிருந்தார். அதில், தனது கணவர் குடும்பத்தாரின் சதியால், தானும் தனது 7 வயது மகளும் ஜெர்மனியில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருப்பதாக அவர் கூறியிருந்தார்.
இந்தத் தகவல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் கவனத்திற்கு சென்றது. அதனைத் தொடந்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இது தொடர்பாக ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தைத் தொடர்பு கொண்டு தகவல்கள் பெற்றார்.
தனது டிவிட்டர் பக்கத்திலும் இது குறித்து சுஷ்மா கருத்துத் தெரிவித்திருந்தார். அதில் ‘ஜெர்மனியில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து கர்பிரீட் குறித்த தகவல்களைப் பெற்றுள்ளதாக ஒரு டிவிட்டிலும், மற்றொன்றில் இந்த விவகாரம் தொடர்பாக கர்பிரீட்டின் தந்தையிடம் பேசி இருப்பதாகவும், நிச்சயம் அப்பெண்ணிற்கு தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் உறுதியளித்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக முகாமில் இருந்து பத்திரமாக மீட்கப்பட்ட அப்பெண், தனது மகளுடன் இன்று டெல்லி வந்தடைந்தார்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய அவர் செய்தியாளர்களிடம், தன்னைப் பத்திரமாக இந்தியா கொண்டு வந்து சேர்த்த மத்திய அரசுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தன்னுடைய நிலைக்கு காரணமானவர்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க அவர் மறுத்து விட்டார்.