சசிகலா 2வது வீடியோ: பெங்களூரு சிறை தலைமை கண்காணிப்பாளர் நிகாம் அம்ரித் அதிரடி மாற்றம்!
சசிகலா ஷாப்பிங் செய்துவிட்டு சிறைக்கு திரும்பும் 2-வது வீடியோ வெளியான நிலையில் அந்த சிறையின் தலைமை கண்காணிப்பாளர் நிகாம் அம்ரித் மாற்றப்பட்டுள்ளார்.
Recommended Video
பெங்களூரு: சிறையைவிட்டு வெளியே போய் சசிகலா ஷாப்பிங் செய்துவிட்டு திரும்பும் வீடியோ வெளியான நிலையில் பெங்களூரு சிறையின் தலைமை கண்காணிப்பாளர் நிகாம் பிரகாஷ் அம்ரித் மாற்றப்பட்டுள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனையை பெங்களூரு சிறையில் அனுபவித்து வருகிறார் சசிகலா. ஆனால் சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து வெளியில் இருப்பதை போல சொகுசாக சிறைக்குள் இருக்கிறார் சசிகலா என குற்றம்சாட்டினார் டிஐஜி ரூபா.
விசாரணை குழு
இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. இது தொடர்பான வீடியோ பதிவும் வெளியானது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற அதிகாரி வினய்குமார் தலைமையில் கர்நாடகா அரசு விசாரணை குழு அமைத்தது.
2-வது வீடியோ
இந்நிலையில் சசிகலாவும் இளவரசியும் ஹாயாக ஷாப்பிங் செய்துவிட்டு சிறைக்கு திரும்பும் புதிய வீடியோ வெளியானது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பதிவு கர்நாடகா அரசின் ஊழல் தடுப்பு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
74 ஆதாரங்கள்
மேலும் சசிகலா சிறையில் சொகுசாக இருக்கிறார் என்பதற்கான 74 ஆதாரங்களையும் டிஐஜி ரூபா, ஊழல் தடுப்புப் பிரிவிடம் கொடுத்தார். இந்த நிலையில் சசிகலா அடைக்கப்பட்டுள்ள பெங்களூரு பரப்பன அக்ரகார சிறையின் தலைமை கண்காணிப்பாளர் நிகாம் பிரகாஷ் அம்ரித் மாற்றப்பட்டுள்ளார்.
|
அதிரடி மாற்றம்
கர்நாடகா ரிசர்வ் போலீஸின் 9-வது பட்டாலியன் கமாண்டண்ட்டாக ஆக அம்ரித் நியமிக்கப்பட்டுள்ளார். பெங்களூரு சிறையின் புதிய தலைமை கண்காணிப்பாளராக பால்கிருஷ்ணா நியமிக்கப்பட்டுள்ளார்.