'கேப்டன்' விஜயகாந்தின் திட்டம் தான்... ஆந்திராவில் வீட்டுக்கு வந்து ரேஷன் பொருட்கள் சப்ளை
Recommended Video
அமராவதி: நாட்டிலேயே முதன் முறையாக ரேஷன் பொருட்களை வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை ஆந்திர அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 151 இடங்களை கைப்பற்றி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஆட்சியை கைப்பற்றியது. அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதலமைச்சராக பதவியேற்றார். இதனையடுத்து பல அதிரடி முடிவுகளையும் அவர் தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.
அந்த வகையில் அரிசி, மண்ணெண்ணெய், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நிற்க வேண்டியுள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்க, விரும்பும் பொருட்களை தொலைபேசியில் தெரிவித்தால் வீடு தேடி சென்று விநியோகம் செய்யும் முறையை அமல்படுத்தப்பட உள்ளது.
இம்முறை செப்டம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
முதலமைச்சராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பின்னர் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்டதாகவும், ரேஷன் கடைகளில் உள்ள முறைகேடுகளை ஒழிக்க இத்திட்டம் பரிந்துரைக்கப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், அமைச்சர்கள் ஏதேனும் தவறு, முறைகேடுகளில் ஈடுபட்டால் அவர்கள் கட்சி பதவியிலிருந்தும், அமைச்சரவையில் இருந்தும் நீக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ரேஷன் கடைகளில் நிலவும் ஊழலை களைந்து மக்களின் வீடு தேடி அரிசி உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்படும். இதற்காக அவர்களிடம் கூடுதல் கட்டணம் ஏதும் வசூலிக்கப்படமாட்டாது. தமிழக மக்கள் ரேஷன் கடைகளில் கால்கடுக்க நிற்கும் காலம் இனி மலையேறிவிடும் என கடந்த தேர்தல்களில் கனவு திட்டங்களை அறிக்கையாக வெளியிட்டு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் களப்பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.