தொடங்கியது விவசாயிகள் 10 நாள் வேலைநிறுத்தம்: 8 மாநிலங்களில் காய்கறி, பால் விநியோகம் பாதிப்பு
8 மாநிலங்களில் விவசாயிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவங்கியுள்ளதால், பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
மும்பை : மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் நாடு தழுவிய போராட்டத்தில் 8 மாநிலங்களில் காய்கறி, பால் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை மேலும் தீவிரமாகலாம் என்று மக்கள் தெரிவித்துள்ளனர்.
விவசாயிகள் மீதான பாரபட்சமான நடவடிக்கையை மத்திய அரசு கைவிடக்கோரியும், கடந்த ஆண்டு நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 6 பேர் நினைவு தினத்தையொட்டியும் விவசாயிகள் 10 நாட்கள் வேலை நிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். 100க்கும் மேற்பட்ட விவசாய அமைப்பினர் இந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
மத்திய பிரதேசம், மகாராஷ்ட்ரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரபிரதேசம், கர்நாடகம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் விவசாயிகள் மட்டுமல்லாது காய்கறி உற்பத்தியாளர்கள், பால் விற்பனையாளர்களும் இந்த போராட்டத்தில் பங்குபெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் காய்கறிகளை குப்பையில் கொட்டியும், பாலை கீழே ஊற்றியும் இன்று போராட்டத்தை துவங்கினர். மேலும், கிராமத்தில் இருந்து நகரங்களுக்கு எந்த விளை பொருட்களையும் அனுப்பப் போவது இல்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Punjab: Farmers spill milk on the road during their 10 days 'Kisan Avkash' protest, in Ludhiana's Samrala (Earlier visuals) pic.twitter.com/rh7Fp5uVnl
— ANI (@ANI) June 1, 2018
விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், விளைபொருட்களுக்கான குறைந்த அளவு ஆதார விலையை உயர்த்துவது,உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன்வைத்து உள்ளார்கள். போராட்டம் ஆரம்பித்த முதல் நாளிலேயே பல்வேறு நகரங்களில் காய்கறித் தட்டுப்பாடு அபாயம் எழுந்துள்ளது. இந்தப் போராட்டம் ஜூன் 10ம் தேதி வரை தொடர்ந்தால், மிகுந்த பாதிப்பு ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.