கிரீன் சிக்னல் காட்டிய புடின்.. முதல்நாள் போன் கால்.. மறுநாளே லடாக் விசிட்.. மோடியின் ராஜதந்திரம்!
லடாக்: பிரதமர் மோடியின் திடீர் லடாக் விசிட்டிற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். முக்கியமாக ரஷ்யா, ஜப்பான் உள்ளிட்ட உலக நாடுகளின் தீவிரமான ஆதரவும் இதற்கு காரணம் என்று கூறுகிறார்கள்.
இந்தியா - சீனா இடையே மோதல் நிலவி வரும் நிலையில் இன்று அதிரடி திருப்பமாக இந்திய பிரதமர் மோடி லடாக் சென்றார். லடாக்கில் இருக்கும் நிம்மு ராணுவ முகாமிற்கு அவர் சென்று இந்திய வீரர்களுடன் உரையாடினார்.
எல்லையில் நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கண்டறிந்தார். முக்கியமாக இந்திய ராணுவத்தின் 14வது படைப்பிரிவு வீரர்களை பிரதமர் மோடி சந்தித்து அவர்களிடம் அதிரடியாக உரையாற்றினார். மோடியின் இந்த வருகை சீன தரப்பை நிலைகுலைய வைத்து உள்ளது.
சீன எதிர்ப்பை மதிக்காத ரஷ்யா.. ரூ.38,900 கோடியில் இந்தியாவிற்கு வரும் போர் விமானம், ஏவுகணை சிஸ்டம்
காரணம் என்ன
பிரதமர் மோடியின் இந்த லடாக் பயணத்திற்கு பின் நிறைய காரணங்கள் இருக்கிறது என்று கூறுகிறார்கள். உலக நாடுகளின் உதவியுடன் எல்லை பிரச்னையை பிரதமர் மோடி தீர்க்க போகிறார். அவருக்கு உலக நாடுகளின் சப்போர்ட் இருக்கிறது . ஆசியாவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளின் சப்போர்ட் இருக்கிறது. இதனால் மோடி ஆக்சனுக்கு தயார் ஆகிவிட்டார். அதனால்தான் இன்று அதிரடியாக கூக்குரலிட்டு இருக்கிறார், என்று கூறுகிறார்கள்.
நேபாளம் பிரச்சனை
அந்த வகையில் சீன மோதலில் இந்தியாவிற்கு பெரிய பிரச்சனையாக இருந்தது நேபாளம்தான். நேபாளம் இந்தியாவை எல்லையில் கடுமையாக நெருக்கி வந்தது. இதற்கு பின் சீனாதான் இருந்தது. ஆனால் தற்போது அதே நேபாளத்தில் ஆட்சியே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்நாட்டு பிரதமர் சர்மா ஒலிக்கு எதிராக ஆளும் கட்சியினரே கொதித்து போய் இருக்கிறார்கள். இந்தியாவை சீண்டிவிட்டு தற்போது பதவியை இழக்கும் நிலைக்கும் நேபாளம் சென்று உள்ளது. இதற்கு பின் இந்தியாவின் ராஜாங்க ரீதியான அழுத்தம் இருப்பதாகவும் கூறுகிறார்கள்.
பாகிஸ்தான் பிரச்சனை
ஒரு பக்கம் நேபாளம் பிரச்சனையை இந்தியா எளிமையாக சமாளித்துக் கொண்டு இருக்க இன்னொரு பக்கம் பாகிஸ்தானையும் இந்தியா அடக்கி வைத்துள்ளது. முக்கியமாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் பலரை காஷ்மீர் போலீஸ் அடுத்தடுத்து என்கவுண்டர் செய்துள்ளது. மொத்தமாக அங்கு தீவிரவாத இயக்கத்திற்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பை துண்டித்துள்ளது. இந்தியாவின் இந்த அதிரடியால் பாகிஸ்தான் சீனாவிற்கு ஆதரவாக முழுமையாக களமிறங்க முடியாமல் இருக்கிறது.
அதிலும் கராச்சி குண்டு வெடிப்பு தொடங்கி பல விஷயங்களில் இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் ராஜாங்க ரீதியாகவும் தோற்றுவிட்டது. எங்கே சீனாவை ஆதரிக்க போய் உலக நாடுகளின் வெறுப்பை சம்பாதிக்க வேண்டி இருக்குமோ என்று பாகிஸ்தான் கடும் அச்சத்தில் இருக்கிறது.
உலக நாடுகள் ஆதரவு
நேபாளம் மற்றும் பாகிஸ்தான் பிரச்சனையை இந்தியா சமாளித்த நிலையில் தற்போது சீனாவிற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. உலக நாடுகளின் உதவியுடன் சீனாவிற்கு இந்தியா கடுமையான அழுத்தம் கொடுக்க தொடங்கி உள்ளது. முக்கியமாக சீனாவிற்கு எதிராக அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் எழுந்துள்ளது. இந்தியாவிற்கு ஆதரவாக படைகளை அனுப்புவோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஜப்பான் எதிர்பார்க்கவில்லை
பிரதமர் மோடிக்கும் இந்தியாவிற்கும் இந்த தொடர் நிகழ்வுகள் நம்பிக்கை அளித்துள்ளது. இதில் சீனாவிற்கு பெரிய அதிர்ச்சியான முதல் விஷயம் ஜப்பானின் நிலைபாடுதான். இந்தியாவிற்கு ஆதரவாக ஜப்பான் களமிறங்கி, தீவிரமாக போர் பயிற்சிகளை செய்து வருகிறது. அதிலும் ஜப்பானின் கடல்படையுடன் இந்தியா செய்த போர் பயிற்சியும், அந்தமான் அருகே போர் கப்பல்களை கொண்டு வர ஜப்பான் திட்டமிட்டு வருவது இந்தியாவிற்கு ஆதரவாக மாறியுள்ளது.
ஏசியான் நாடுகள் ஆதரவு
அதோடு இங்கிலாந்தும் ஹாங்காங் விஷயத்தில் சீனாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. ஹாங்காங் மக்களுக்கு குடியுரிமை வழங்குவோம் என்று கூட இங்கிலாந்து கூறி உள்ளது. அதோடு ஏசியன் நாடுகளும் சீனாவை கடுமையாக எதிர்க்க தொடங்கி உள்ளது. ஏசியன் (ASEAN) என்பது இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், சிங்கப்பூர், மலேசியா, பிலிப்பைன்ஸ், கம்போடியா, மியான்மர், புருனோய், லாவோஸ் ஆகிய நாடுகள் கொண்ட கூட்டமைப்பு ஆகும்.
ரஷ்யாவின் திடீர் ஆதரவு
இப்படி உலகின் முக்கியமான நாடுகள் எல்லாம் சீனாவிற்கு எதிராக திரும்பியது இந்தியாவிற்கு பெரிய அளவில் பலமாக மாறியது. இந்த நிலையில்தான் நேற்று மாலை 4 மணி அளவில் சீனாவிற்கு பெரிய அதிர்ச்சி செய்தி வந்தது. அதுதான் ரஷ்ய அதிபர் புடின் மற்றும் இந்திய பிரதமர் மோடியுடனான போன் கால். இரண்டு நாடுகளும் ராணுவ ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் உறவை மேம்படுத்த வேண்டும் என்று இவர்கள் இருவரும் போனில் பேசினார்கள்.
சீனா எதிர்பார்க்கவில்லை
நேற்றுதான் ரஷ்யாவின் நிரந்தர அதிபராக புடின் தேர்வாவது கிட்டத்தட்ட உறுதியானது. அவர் நேற்று தேர்வான பின் செய்த முதல் போன் கால் மோடிக்குத்தான். சீனாவிடம் இந்த நிகழ்விற்கு பின் புடின் பேசவே இல்லை. சீனாவிற்கு ஆதரவாக இருந்த முக்கியமான வல்லரசு நாடு ரஷ்யா. ஆனால் தற்போது அதே நாடு சீனாவிற்கு எதிரியான இந்தியாவோடு கைகோர்த்தது சீனாவை நிலைகுலைய வைத்துள்ளது.
ஆயுதங்கள் வாங்கினார்
இந்த போன் காலில் இந்தியாவுடன் நெருக்கமான உறவை பேணப்போவதாக புடின் தெரிவித்தார். இதுதான் புடின் இந்தியாவிற்கு கொடுத்த சிக்னல் என்று கூறுகிறார்கள். சீனாவுடன் இந்தியா மோதினாலும் கூட ரஷ்யா நடுநிலையாக செல்லும், சீனாவை ஆதரிக்காது என்று கூறுகிறார்கள். இரண்டு நாட்டுக்கும் ஆயுதங்களை விற்று இதில் ரஷ்யா குளிர் காயுமே ஒழிய, சீனாவை ஆதரிக்காது என்று கூறுகிறார்கள்.
இதுதான் முடிவு
இப்படி உலக நாடுகள் எல்லாம் இந்தியா பக்கம் நிற்கிறது. ரஷ்யாவும் நடுநிலையாக உள்ளது. இலங்கை இந்த பிரச்சனையில் தலையே நீட்டுவது இல்லை. நேபாளம், பாகிஸ்தான் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி வருகிறது. இதுதான் சீனாவை எதிர்க்க சரியான நேரம் என்று இந்தியா முடிவெடுத்து இருக்கிறது. இதனால்தான் தற்போது பிரதமர் மோடியே நேரடியாக லடாக்கில் களமிறங்கி உள்ளார் என்கிறார்கள்.