ஈழத்தமிழர்களுக்காக உலகத்தமிழர்கள் ஒன்றுபடவேண்டும்: வைகோ பேச்சு
பெங்களூர்: ஈழத்தமிழர்களுக்காக உலகத்தமிழர்கள் ஒன்றுபட்டு போராடவேண்டும் என்று வைகோ கூறியுள்ளார். கர்நாடகத்தில் தமிழர்களும், கன்னடர்களும் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொங்கு தமிழ் இயக்கம் சார்பில் இனமான தமிழர் நினைவேந்தல் நிகழ்ச்சி பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் ஞாயிறு மாலை நடைபெற்றது.
இதில், கலந்து கொண்ட ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ, குத்து விளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வைகோ பேசியதாவது:
பெங்களூர் தமிழ்ச் சங்கத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசுவதை பெருமையாக நினைக்கிறேன். அரசியலுக்கு அப்பாற்பட்டது தான் தமிழ்ச் சங்கங்கள்.தமிழ்நாட்டில் கூட செய்யாத சில நல்ல காரியங்களை பெங்களூர் தமிழ்ச் சங்கம் செய்துள்ளது.
உலகத்தமிழர்கள்
ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழுக்காகவும் ஏராளமான போராட்டங்களை நடத்தி உள்ளது. உலகத் தமிழர்களை ஒன்றுபடுத்தி இருக்கிறது. இதுபோல உலக நாடுகள் முழுவதும் தமிழ்ச் சங்கங்களை நிறுவ வேண்டும். உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும்.
காவிரி பிரச்சினை வரும் போது கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்கள் ஒரு போதும் கன்னடர்களுக்கு எதிராகவோ, அரசுக்கு எதிராகவோ போராட்டத்தில் ஈடுபட்டதில்லை. அவர்கள் எப்போதும் கன்னடர்களுக்கு ஆதரவாக தான் இருந்து வருகிறார்கள்.
தமிழர்கள் – கன்னடர்கள்
பெங்களூர், மைசூர் உள்பட மாநிலம் முழுவதும் வசிப்பவர்களுக்கு பாதுகாப்பு முக்கியமானதாகும்.கர்நாடகத்தில் வாழும் கன்னடர்களும், தமிழர்களும் வேற்றுமைகளை மறந்து ஒற்றுமையாக வாழ வேண்டும். ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கன்னடர்கள் புரிந்து கொள்ள வேண்டும். கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுடன் கன்னடர்கள் இணங்கி வாழ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இந்தியா ஆயுத உதவி
இலங்கையில் நடந்த இனப்படுகொலையை இந்தியா தான் அரங்கேற்றியது. ஆரம்பத்தில் ராஜீவ்காந்தி அரசும் தற்போது பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசும் அதனை தொடர்ந்து செய்து வருகிறது. தமிழ் இனத்தை அழிக்க இந்திய அரசு, ராணுவம், ஆயுத உதவிகளை வழங்கியது. பாகிஸ்தான் மீது போர் தொடுக்க கூட இந்தியா, அவ்வளவு ஆயுதங்களை பயன்படுத்தியதில்லை.
இனப்படுகொலை சாட்சிகள்
என் இனப்பெண் இசைப்பிரியாவை சிங்கள ராணுவத்தினர் கற்பழித்து கொடூரமாக கொலை செய்தார்கள். அதுபோல 8 தமிழர்களை ஆடை இல்லாமல், அவர்களது கண்களை கட்டி சுட்டுக் கொன்றார்கள். இதற்கான ஆதாரத்தை சேனல் 4 வெளியிட்டது. அந்த காட்சிகள் அனைத்தும் இனப்படுகொலை நடந்ததற்கான சாட்சிகள். ஒரு சிங்கள பெண்ணையாவது விடுதலைப்புலிகள் தொட்டது கூட இல்லை.
பொது வாக்கெடுப்பு
இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட இங்கிலாந்து பிரதமர் கேமரூனை, நன்றியுள்ள தமிழனாக பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்.ஒவ்வொரு ஆண்டும் பொது வாக்கெடுப்பின் மூலம் ஒரு புதிய நாடு உருவாகி வருகிறது. அதுபோல தமிழ் ஈழம் அமையவும் பொது வாக்குகெடுப்பு நடத்த வேண்டும். அது தான் தீர்வாக இருக்கும். பொது வாக்கெடுப்பின் போது தமிழர்கள் வசிக்கும் பகுதியில் குடியேறிய சிங்களர்களையும், போலீஸ், ராணுவத்தையும் வெளியேற்ற வேண்டும்.
பதவி ஆசை இல்லை
எனக்கு அரசியலில் பெரிய பதவி வேண்டும் என்று ஆசைப்பட்டதில்லை. சுதந்திர தமிழீழம் அமைந்ததும், ஜ.நா சபையில் நான் பேச வேண்டும் என்று தம்பி பிரபாகரனிடம் தெரிவித்திருந்தேன். ஐ.நா சபை கட்டிடத்தில் சுதந்திர தமிழீழ கொடி பறக்க விட வேண்டும். இதற்காக உலக தமிழர்கள் ஒன்றுபட வேண்டும். நம்மால் முடியாதது ஒன்றும் இல்லை என்றார் வைகோ இந்த நிகழ்ச்சியில் பெங்களூர் தமிழ்ச்சங்க தலைவர் தாமோதரன், மாநகராட்சி கவுன்சிலர் தன்ராஜ், பேராசிரியர் ராமமூர்த்தி, எழுத்தாளர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொங்கு தமிழ் இயக்கத்தினர் செய்திருந்தார்கள்.