ஹர்திக் பட்டேல் ஆதரவு யாருக்கு? குஜராத்தில் பாஜகவை வீழ்த்தும் ஆயுதத்திற்காக ஏங்கும் காங்கிரஸ்
குஜராத் மீண்டும் காவி மயம் ஆகாமல் தடுக்குமா பட்டேல் சமூகம் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது காங்கிரஸ்.
காந்திநகர் : குஜராத் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் நிலையில் வாக்குவங்கியான பட்டேல் சமூகத்தினர் பா.ஜ.க.,விற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கலாம் என்கிற கருத்துக்கு வலு சேர்த்து வருகிறார் பட்டேல் சமூகத்திற்கு ஆதரவான போராட்டைத் துவங்கி வைத்த ஹர்திக் பட்டேல்.
தேர்தல் ஆணையத்தால் தாமதிக்கப்பட்டு வரும் குஜராத் சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இங்கு வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்கிற தன்மானப் பிரச்னையில் இருக்கும் பா.ஜ.க.,வுக்கு பெரிய வாக்கு வங்கியான பட்டேல் சமூகம் அடி கொடுக்க தயாராகி வருகிறது.
இந்நிலையில் கடந்த ஆண்டு பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு கேட்டுப் போராடிய ஹர்திக் பட்டேலை அந்தச் சமூகம் அவர்களுக்கான அடையாளமாகப் பார்க்கிறது. அவரது முடிவுகளுக்காக பட்டேல் இனத்தினர் காத்திருக்கிறார்கள். அவருக்கு ஆதரவு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது.
காங்கிரஸை ஆதரிப்பார்களா பட்டேல்கள்
சமீபத்தில் ஒரு கூட்டத்தில் உரையாடிய ஹர்திக் பட்டேல், ‘பெரிய திருடன் பா.ஜ.க.,வை சின்ன திருடன் கொண்டே விரட்டி அடிக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். குஜராத் மீண்டும் காவிமயம் ஆகாமல் தடுக்க பழம் பெரும் கட்சியான காங்கிரஸுக்கு ஆதரவு கொடுக்க வேண்டிய சூழல் வந்தாலும் வரலாம்' என்று சொல்லி இருக்கிறார்.
தேர்தலுக்குக் காத்திருப்போம்
அதே வேளையில், ட்விட்டர் பதிவில் ‘ அவசரம் இல்லை. காங்கிரஸுக்கு ஆதரவு எப்போது தரவேண்டுமோ அப்போது கொடுக்கலாம். அதுவரை தேர்தலுக்காகக் காத்திருப்போம்' என்று பதிவிட்டு இருக்கிறார். இதை பலரும் ஆமோதித்து இருக்கிறார்கள்.
ரகசியமாக சந்தித்த தலைவர்கள்
கடந்த திங்களன்று அகமதாபாத்தில் ராகுல் காந்தி தங்கியிருந்த அதே ஹோட்டலில் தான் ஹர்திக் பட்டேலும் தங்கி இருந்தார். மாலை அங்கு வந்தவர், அதிகாலையில் ஹோட்டலில் பின்பக்கமாக வெளியேறினார் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு ராகுலை சந்தித்து தேர்தல் குறித்து பேசி இருக்கலாம் என்றும் தகவல் வெளியானது.
சந்திப்பு நிகழவில்லை
இதற்கு பதிலளித்த ஹர்திக், ‘நான் ராகுலைச் சந்திக்கவில்லை. அங்கு குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் கெலாட் அவர்களை மட்டுமே சந்தித்து பேசினேன். அதே நேரம் ராகுலை விரைவில் சந்திக்கும் வாய்ப்பும் ஏற்படலாம்' என்றார். இதனால் பா.ஜ.க தலைமைக்கு கிலி பிடித்து இருக்கிறது.