ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு.. ஜூன் 1ம் தேதி கிளைமேக்ஸ்!
டெல்லி: முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு ஜூன் 1ம் தேதி கிளைமேக்ஸ் கட்டத்தை எட்டுகிறது. அன்றே வாதங்கள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என்பது உச்சநீதிமன்றத்தின் கறார் உத்தரவாகும்.
சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்தது. இதை எதிர்த்து, கர்நாடக அரசு, திமுகவின் அன்பழகன் தரப்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்துள்ளன.
நீதிபதிகள் பி.சி.கோஸ் மற்றும் அமிதவா ராய் முன்னிலையில் நடைபெறும், இந்த வழக்கில், முதலில் கர்நாடக தரப்பும், பின்னர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசன், சுதாகரன் தரப்பும் வாதத்தை நிறைவு செய்தன. 2வது சுற்றாக வாதிட கர்நாடக தரப்புக்கு அனுமதியளிக்கப்பட்டது.
ஆச்சாரியா
கர்நாடக தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா வாதிட்டு வந்தார். நேற்றும் தனது வாதத்தை அவர் தொடர்ந்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துகள் சில, குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சுதாகரன் பெயரில் காண்பிக்கப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை இவர்கள் பெயரில் பதிவு செய்வதற்காக அரசு அதிகாரிகளுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டது. குறைந்த மதிப்பீட்டில் பதிவு செய்ய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டார்கள்.
ஏ.ஆர்.ரஹ்மான் கச்சேரி
ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் என்று கூறப்படும் சுதாகரன் திருமணம் மிகவும் ஆடம்பரமாக பெருத்த செலவில் நடந்து உள்ளது. இதில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போன்றவர்களின் இசை நிகழ்ச்சியும் அதிக செலவில் நடைபெற்றதாக அவரிடம் ரசீது வாங்கப்பட்டு உள்ளது.
வருவாய்
ஆஞ்சநேயா பிரிண்டர்ஸ் நிறுவனத்தை அவர்கள் கட்டிடத்துடன் வாங்கி இருக்கிறார்கள். அதற்கான மதிப்பு மிகவும் குறைத்து காண்பிக்கப்பட்டு உள்ளது. தேசிய வங்கிகளிடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகைகள் வருவாய் என்று தவறாக காண்பிக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு ஆச்சாரியா வாதிட்டார்.
வெளிநாடு
இதனிடையே ஆச்சார்யா, தான் வெளிநாடு செல்வதாகவும், அதனால் மே 30ம் தேதிக்குப் பிறகு விசாரணையை தொடரலாம் என்றும், அப்போது தனக்கு ஒரு முழுநாள் தேவைப்படும் என்றும் கூறினார்.
ஜூன் 1ம் தேதி
இதற்கு நீதிபதிகள், ஜூன் 1ம் தேதியன்று முழுநாள் விசாரணையை வைத்துக்கொள்ளலாம் என்றும், அன்று ஆச்சார்யாவுக்கு 2 மணி நேரம் ஒதுக்கப்படும் என்றும், மீதி நேரத்தில் மற்றவர்கள் தங்கள் வாதங்கள் முன்வைக்கலாம் என்றும் தெரிவித்தனர்.
அனைத்து வாதங்கள்
இதையடுத்து, ஜூன் 1ம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது. அன்றைய தினம், அனைத்து தரப்பும் தங்கள் வாதங்களையும் நிறைவு செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்பிரமணியன் சுவாமி
இதனிடையே, மனுதாரர்களில் ஒருவரான சுப்பிரமணியசாமி, தான் சட்டத்தின் அடிப்படையில் சில வாதங்களை முன்வைக்க வேண்டியிருப்பதாக தெரிவித்தார். அவருடைய வாதத்தை எழுத்து வடிவில் தாக்கல் செய்யுமாறும், அவருக்கும் ஜூன் 1ம் தேதியன்று சிறிது நேரம் ஒதுக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தீர்ப்பு எப்போது..?
மே 16ம் தேதி முதல் ஜூன் 28ம் தேதிவரை, உச்சநீதிமன்றத்திற்கு கோடை விடுமுறையாகும். இருப்பினும், இவ்வழக்கிற்காக ஜூன் 1ம் தேதி ஒருநாள் நேரத்தை ஒதுக்கியுள்ளனர் நீதிபதிகள். அன்றைய தினம் விசாரணையை முடித்து, தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் என்று தெரிகிறது.
அனேகமாக கோடை விடுமுறை முடிந்த பிறகு, தீர்ப்பு வெளியாகலாம். ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் தீர்ப்பு வெளியாகும் வாய்ப்பு உள்ளது.