ஓரினச் சேர்க்கை கிரிமினல் குற்றமா? சட்டத்தை மறு பரிசீலனை செய்ய சுப்ரீம் கோர்ட் சம்மதம்!
டெல்லி: ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றமாக கருத வேண்டும் என 2013ம் ஆண்டில் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலனை செய்ய உள்ளதாக உச்சநீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.
ஓரினச் சேர்க்கையை கிரிமினல் குற்றம் இல்லை என டெல்லி ஹைகோர்ட் 2009ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் 2013ம் ஆண்டு, ஒரு முக்கிய உத்தரவை பிறப்பித்தது. அதன்படி, ஓரினச் சேர்க்கை என்பது சட்டப்பிரிவு 377ன்கீழ் குற்றம்தான் என அறிவித்தது.
ஆனால், ஓரினச் சேர்க்கையை குற்றமாக்கி வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஓரினச் சேர்க்கையாளர்கள் 5 பேர் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மறு வரையறை
ஓரினச் சேர்க்கையாளர்கள் மனுவை அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என்று இன்று தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச் அறிவித்தது. மேலும், ஓரினச் சேர்க்கையை தவறு என வரையறுக்கு சட்டப் பிரிவு 377யை மறுவரையை செய்யவேண்டும், காலத்திற்கு ஏற்ப நடைமுறைகள் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். இதற்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ஆதாருக்கு எதிரான வழக்கு
சமையல் காஸ் மானியம், முதியோர் ஓய்வூதியம் போன்ற அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்து வந்த நீதிபதிகள் கடந்த ஆகஸ்ட் மாதம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு தீர்ப்பை வழங்கினர்.
அந்தரங்க உரிமை
உச்ச நீதிமன்ற அப்போதைய தலைமை நீதிபதி ஜே.எஸ். கேஹர் தலைமையிலான 9 நீதிபதிகளைக் கொண்ட அமர்வு அந்த தீர்ப்பை ஒருமனதாக வழங்கியது.
தனிநபர் தகவல் பாதுகாப்பு உரிமை என்பது, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 21வது பிரிவும், அந்த சட்டத்தின் 3வது பாகமும் பொதுமக்களுக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை, தனிநபர் சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளின் உள்ளார்ந்த ஒரு பகுதியே ஆகும்.. என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது.
ஓரினச் சேர்க்கை உரிமை
இந்த தீர்ப்பு காரணமாக ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கு பலம் பெற்றது. வீட்டுக்குள் நடைபெறும் அந்தரங்க தேர்வில் நீதிமன்றம், சட்டம் தலையிடுவது அந்தரங்க உரிமைக்கு எதிரானது என்ற வாதம், ஓரினச் சேர்க்கையாளர்கள் வழக்கில் முன் வைக்கப்பட்டது. அதன் காரணமாகவே, உச்சநீதிமன்றம் தனது முந்தைய தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய முன் வந்துள்ளது.
சட்டம் சொல்வது இதுதான்
இந்திய தண்டனை சட்டத்தின், 377 வது பிரிவு, 1860ம் ஆண்டு, அதாவது சுமார் 153 வருடங்களுக்கு முன்பாக பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டது. ஆண்கள் நடுவேயான உடலுறவை இயற்கைக்கு மாறான குற்றம் என்று இந்த சட்டம் வரையறை செய்துள்ளது. பலாத்காரத்திற்கு ஈடான தண்டனைக்குறிய குற்றமாகவும் அது குறிப்பிடுகிறது. 'ஓரல் செக்ஸ்' எனப்படும் வாய் புணர்ச்சியை ஒரு ஆணும், பெண்ணும் செய்தாலும் அது குற்றம் என இந்த சட்டம் வரையறுக்கிறது. ஆணுறுப்பு மற்றும் பெண்ணுறுப்பு இணைத்தல் மட்டுமே சரியான செக்ஸ் என இந்த சட்டம் வரையறுத்துள்ளது.