தமிழகத்தில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு பைப்லைன்- சுப்ரீம் கோர்ட் அனுமதி
டெல்லி: தமிழகத்தில் கெயில் எரிவாயு திட்டத்தை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது. இந்த திட்டத்திற்காக, விளை நிலங்களில் எரிவாயு குழாய்களை பதிக்க எந்த தடையும் கிடையாது என்று கூறிய நீதிபதிகள், சந்தை நிலவரப்படி விவசாயிகளுக்கு 40 சதவீதம் இழப்பீடு தரவும் உத்தரவிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக, தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தமிழக விவசாயிகள் மற்றும் தமிழக அரசின் எதிர்ப்பை மீறி இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்தியா முழுவதும் இயற்கை எரிவாயுவை குழாய் மூலம் எளிதில் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை மத்திய அரசின் கெயில் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. கொச்சியில் இருந்து தமிழகம் வழியாக பெங்களூருவிற்கு, குழாய் மூலம் எரிவாயு அனுப்ப கெயில் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இந்த எரிவாயு குழாய் தமிழகத்தின் கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக செல்ல உள்ளது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படும் எனவும், அதனால் இத்திட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் தமிழக விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
தமிழக விவசாயிகளின் கோரிக்கை மற்றும் எதிர்ப்பை தொடர்ந்து தமிழக விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் கெயில் நிறுவனத்தின் திட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்தது. விவசாய நிலங்களில் எரிவாயு குழாய் பதித்தால், விவசாயம் பாதிக்கப்படும். எனவே, தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில், குழாய் பதிக்கலாம்' என, தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசின் உத்தரவை ஏற்க மறுத்த, கெயில் இந்தியா நிறுவனம், தமிழக அரசின் அறிவிப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டது. விளை நிலங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என விவசாயிகள் தரப்பில் கூறப்பட்டதற்கு, அவர்களுக்கு போதிய இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக கெயில் நிறுவனம் தெரிவித்திருந்தது.
எரிவாயு குழாய் அமைக்கும் திட்டத்தை மாற்று வழியாக செயல்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள், கடந்த 2013ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக அரசின் தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். மேலும் கெயில் நிறுவனம் தமிழக விளைநிலங்கள் வழியாக குழாய் அமைக்கவும் அனுமதி அளித்தனர்.
அப்பீல்
இதை எதிர்த்து, தமிழக அரசு மற்றும் தமிழக விவசாயிகள் சங்கங்கள் சார்பில், உச்சநீதிமன்றத்தில், மேல் முறையீடு செய்யப்பட்டது. தமிழகத்தில் 7 மாவட்டங்களில் உள்ள விளைநிலங்கள் வழியாக, கெயில் நிறுவனம், எரிவாயு குழாய் பதிப்பதற்கு தடை விதிப்பதுடன், இதுதொடர்பாக தமிழக அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவை உறுதி செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இடைக்காலத்தடை
தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் 2014 ஜனவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து நடந்து வந்தது. இதனிடையே இவ்வழக்கின் மீதான விசாரணை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு கடந்த 2014ம் ஆண்டு அக்டோபர் மாதம் வந்தது. கெயில் நிறுவனத்தின் திட்டத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. இதனை எதிர்த்து கெயில் நிறுவனம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
உச்சநீதிமன்றம் அனுமதி
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் தமிழகம் வழியாக எரிவாயு குழாய் கொண்டு செல்ல கெயில் நிறுவனத்துக்கு இன்று அனுமதி வழங்கி உள்ளது. விளைநிலங்கள் வழியாக எரிவாயு குழாய்களை பதிப்பதற்கு எந்தஒரு தடையும் கிடையாது என்று கூறி உள்ள உச்சநீதிமன்றம், தற்போதைய சந்தை மதிப்பை கருத்தில் கொண்டு விவசாயிகளுக்கு 40 சதவிதம் இழப்பீடு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டு உள்ளது. எரிவாயு குழாய் பதிக்கும் பாதையை மாற்றுவதற்கு தமிழக அரசுக்கு எந்தஒரு உரிமையும் கிடையாது என்றும் கூறியுள்ளது.
தமிழக அரசு மனு தள்ளுபடி
கெயில் நிறுவனத்திற்கான திட்டம் வரையறுக்கப்பட்டபோதே தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்காதது ஏன்? என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பி உள்ளது. வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு தமிழக அரசு செயல்படுகிறதா? என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தமிழகத்தில் கெயில் நிறுவன திட்டத்திற்கு அனுமதி வழங்கிஉள்ள உச்சநீதிமன்றம், எரிவாயு குழாய் பதிப்பதற்கு எதிரான தமிழக அரசின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவு தமிழக விவசாயிகள், அரசியல் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.