ஆயுள் கைதிகள் விடுதலையில் மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா? .. மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி
டெல்லி : ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகளுக்கு தண்டனையை குறைக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு கிடையாதா? என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு, மீதான விசாரணை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து தலைமையிலான அரசியல் சாசன அமர்வு முன்பு நடைபெற்று வருகிறது.
அப்போது குடியரசுத் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை கைதியின் கருணை மனுவை நிராகரித்த பின், அதன் மீது நடவடிக்கை எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதா என்று மத்திய அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த மத்திய அரசின் மூத்த வழக்கறிஞர் ரஞ்ஜித் குமார், உள்துறை அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்திய பிறகு விளக்கம் அளிப்பதாக தெரிவித்தார்.
தண்டனையை குறைக்க குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் அதிகாரம் உள்ள போது மாநில அரசுக்கு அதிகாரம் இல்லையா என்றும் நீதிபதிகள் வினவினர்.
இதற்கு, மத்திய அரசுடன் கலந்தாலோசித்து ஒப்புதல் பெற்ற பிறகே மாநில அரசு முடிவெடுக்க முடியும் என்றும் சில சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் ரஞ்சித் குமார் தெரிவித்தார். இந்த வழக்கில் தொடர்ந்து மத்திய அரசு தனது வாதத்தை நடத்தி வருகிறது.