பசு வன்முறையாளர்களை தண்டிக்க புதிய சட்டம் இயற்றுங்கள்.. உச்ச நீதிமன்றம் அதிரடி
பசு பாதுகாப்பு கும்பல் வன்முறையாளர்களைத் தண்டிக்க நாடாளுமன்றம் புதிய சட்டம் இயற்ற உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லி: பசுபாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வன்முறை தாக்குதல் நடத்துபவர்களின் மீது நடவடிக்கை எடுக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் அதிகரித்து வரும் கும்பல் வன்முறையாளர்களைத் தண்டிப்பதற்கு நாடாளுமன்றம் புதிய தண்டனைச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக சேர்ந்து அப்பாவிகளை அடித்துக் கொலை செய்யும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அதே போல, குழந்தை கடத்தல் என்ற வதந்திகளால் அப்பாவிகளை கும்பலாக அடித்துக்கொலை செய்யும் சம்பவங்களும் நடந்துவருகின்றன. இப்படி பசு பாதுகாப்பு என்ற பெயரில் கும்பலாக வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி துஷர் காந்தி, தெஹ்சீன் பூனவாலா என்பவர்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கும்பல் வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டம் ஒழுங்குக்கு அரசாங்கம்தான் பொறுப்பு. ஆகையால், நாடு முழுவதும் கும்பல் வன்முறைகளை கையாள்வதற்கு நாடாளுமன்றம் புதிய தண்டனை சட்டத்தை இயற்ற வேண்டும் என்று கூறினர்.
மேலும், கொடூரமான கும்பல் வன்முறை புதிய விதிகளாக மாறுவதை அனுமதிக்க முடியாது. அவற்றை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். இது போன்ற வன்முறை சம்பவங்களில் மாநில அரசுகள் செவிமடுக்காமல் இருக்க கூடாது.
சட்டத்தை யாரும் கையில் எடுத்துக்கொள்ள முடியாது. யாரும் தங்களை தாங்களே சட்டமாக்கிக்கொள்ள முடியாது" என்று கும்பல் வன்முறை சம்பவங்களுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
அதோடு, நாடு முழுவதும் பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் வன்முறைகளை ஒழிப்பதற்கு உச்ச நிதிமன்ற நீதிபதிகள் வழிகாட்டு விதிகளை அறிவித்து உத்தரவிட்டுள்ளனர்.