அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக். 29-ஆம் தேதி தொடங்கும்- சுப்ரீம் கோர்ட்
Recommended Video
டெல்லி: அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இஸ்லாமியர்களின் வழிபாட்டுக்கு மசூதி தேவையா என்ற துணை வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது இந்த வழக்கின் மேல் முறையீட்டு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
3 நீதிபதிகளில் தீபக் மிஸ்ரா, அசோக் பூஷண் ஆகியோர் ஒரு தீர்ப்பையும், நீதிபதி அப்துல் நஸீர் மாறுபட்ட தீர்ப்பையும் அறிவித்தனர்.
இந்த நிலையில் அடுத்து முக்கிய வழக்கு விசாரணை விறுவிறுப்படையவுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் (பாபர் மசூதி/ராமர்ஜென்மபூமி) யாருக்குச் சொந்தம் என்பது குறித்து முக்கிய வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இன்றைய தீர்ப்பைத் தொடர்ந்து அடுத்து பிரதான வழக்கின் விசாரணை தொடங்கும் என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது.
அதன்படி, அயோத்தி பிரதான வழக்கின் விசாரணை அக்டோபர் 29-ஆம் தேதி தொடங்கும் என்று நீதிபதிகள் அறிவித்துள்ளனர். இதன் மூலம் அயோத்தி வழக்கில் விசாரணை விரைவடைந்து தீர்ப்பு விரைவில் வெளியாகக் கூடிய வாய்ப்புகள் கூடியுள்ளன.