காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரை நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் அதிரடி
காமராஜர் பல்கலை துணைவேந்தராக செல்லதுரையின் நியமனத்தை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லி: மதுரை காமராஜர் பல்கலைக்கழத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தி துணை வேந்தராக செல்லதுரை நியமனம் செய்யப்பட்டார். "யுஜிசி பல்கலைக்கழக விதிகளின்படி பேராசிரியர் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணி புரிந்தவரைத்தான் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். ஆனால், செல்லதுரை பேராசிரியர் அல்லாத பணியில் பணியாற்றியவர். அதுமட்டுமில்லாமல், செல்லதுரை மீது காவல் நிலையத்தில் குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அதனால், அவரை துணை வேந்தராக நியமிக்கப்பட்டது செல்லாது. அவருடைய நியமனத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று லயோனல் அந்தோனிராஜ் என்பவரும் சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக செல்லதுரை நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை நியமனம் செய்ய உத்தரவிட்டது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து செல்லதுரை உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தர் நியமனம் செய்வதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த நிலையில், செல்லதுரையின் வழக்கு மீண்டும் இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் செல்லதுரை பேராசிரியராக பணி புரியவில்லை என்பதும் அவர் மீது குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதும் அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
இதைத் தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராக செல்லத்துரை நியமனம் செய்யப்பட்டதை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது செல்லும் என்று உறுதி செய்யப்பட்டது. மேலும், செல்லத்துரை துணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அதோடு, காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு புதிய துணை வேந்தரையும் நியமிக்கலாம் என்று உத்தரவிட்டது.