இனி கேட்டதும் விவாகரத்து... 6 மாதம் வெயிட்டிங் தேவையில்லை
விவாகரத்து செய்யும் போது 6 மாத கால அவகாசத்தை வேண்டாம் என தம்பதிகள் மனு தாக்கல் செய்தால் அதை நீதிபதிகள் ரத்து செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
டெல்லி: விவாகரத்து செய்யும் தம்பதிகள் இனி 6 மாத காலம் காத்திருக்க தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
இந்து திருமண சட்டத்தின் கீழ் விவாகரத்து கோரும் தம்பதிகள் 6 மாத காலம் காத்திருக்க வேண்டி உள்ளது. விவாகரத்து செய்வதில் தம்பதியர் மனமாற்றம் அடைந்து, முடிவை மாற்றிக்கொண்டு இணைந்து வாழ இந்த கால கட்டம் உதவும் என கருதப்படுகிறது.
ஆனால் 8 ஆண்டு காலமாகப் பிரிந்து வாழ்கிற ஒரு தம்பதியரின் விவாகரத்து தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே. கோயல், யு.யு. லலித் நேற்று மாறுபட்ட கருத்துடன் தீர்ப்பு அளித்துள்ளனர்.
அந்த தீர்ப்பில், ஏற்கெனவே 8 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிற ஒரு தம்பதியர், மீண்டும் சேர்ந்து வாழ வாய்ப்பு இல்லை என்கிறபோது விவாகரத்து வழங்குவதற்கு 6 மாத காலம் அவகாசம் தர வேண்டும் என்பதை விசாரணை நீதிமன்றம் ரத்து செய்து விடலாம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் சுட்டிக்காட்டுகையில், இந்து திருமண சட்டம் பிரிவு 13பி (2) கூறுகிற அவகாச கால கட்டம் கட்டாயம் அல்ல என்பது எங்களது கருத்து. அது ஒரு வழிகாட்டுதல் மட்டுமே. தம்பதியர் இணைந்து வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்கிறபோது, சூழலுக்கு ஏற்ப இதில் விசாரணை நீதிமன்றம் முடிவு எடுக்கலாம் என கூறி உள்ளனர்.
மேலும் பிரிந்து வாழ்கிற தம்பதியர், கருத்தொருமித்து பிரிந்து வாழ முடிவு எடுத்து விவாகரத்து மனு தாக்கல் செய்த பின்னர், இந்த 6 மாத கால காத்திருப்பு அவகாசத்தை ரத்து செய்து விடுமாறு கோரி மனு தாக்கல் செய்யலாம் எனவும் நீதிபதிகள் கூறி உள்ளனர்.