நீதிபதிகள் லீவு போடக்கூடாது.. சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி உத்தரவு!!
வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
டெல்லி: வார நாட்களில் நீதிபதிகள் விடுப்பு எடுக்கக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் அண்மையில் பதவியேற்றார். பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
முக்கியத்துவம் இல்லாத வழக்குகளை அவசர வழக்காக விசாரிக்கக்கூடாது என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் வார நாட்களில் நீதிபதிகள் விடுமுறை எடுக்கக்கூடாது என நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கியிருப்பதால் தலைமை நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
சுப்ரீம்கோர்ட்டில் மட்டும் சுமார் 55,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் நாட்டில் உள்ள 24 மாநிலங்களின் உயர்நீதிமன்றங்களில் சுமார் 32 லட்சம் வழக்குகள் தேங்கியுள்ளன. மாவட்ட நீதிமன்றங்களிலும் இரண்டரை கோடிக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.
அதிகளவு வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவற்றை விசாரித்து தீர்க்க வேண்டிய கட்டாயத்தில் நீதிமன்றங்கள் உள்ளன. இந்நிலையில் நீதித்துறை பணிச்சுமையில் இருப்பதால் வார நாட்களில் விடுமுறை எடுக்க வேண்டாம் என அனைத்து நீதிபதிகளுக்கும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உத்தரவிட்டுள்ளார்.