பேசாமல், தாஜ்மஹாலை இடித்து தள்ளிவிடுங்களேன்.. உச்ச நீதிமன்றம் கோபம்
தாஜ்மஹாலைப் தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி: உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பாதுகாக்க முடியாவிட்டால் அதை மூடிவிடுங்கள் அல்லது இடித்து தள்ளிவிடுங்கள் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
டெல்லி அருகே உள்ள ஆக்ராவில் முகலாய மன்னர் ஷாஜகானால் தனது மனைவி மும்தாஜின் நினைவாக கட்டிய தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக விளங்குகிறது. தாஜ்மஹாலைப் பார்க்க உலகம் முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதன் மூலம் மத்திய அரசு பெரிய அளவில் அந்நிய செலாவணியை ஈட்டிவருகிறது.
இத்தகைய புகழ்மிக்க தாஜ்மஹால் இருக்கும் பகுதியில் நிறைய தொழிற்சாலைகள் உருவாகியுள்ளது. இதனால், வெள்ளை பளிங்கு கல்லால் ஆன தாஜ்மஹால் மாசுபாட்டால் தற்போது நிறம் மங்கி செம்பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.
அதனால், தாஜ்மஹாலை பாதுகாக்கக் வேண்டும் எனவும் இது குறித்து மத்திய அரசுக்கு அறிவுறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று புதன் கிழமை, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதி எம்.பி.லோகூர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து கூறியதாவது:
உலகின் பொக்கிஷங்களில் ஒன்றான தாஜ்மஹாலை பார்க்க உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கானோர் வருகின்றனர். ஈபிள் டவர் உள்ளிட்ட உலக அதிசயங்களை பாதுகாக்க பிறநாடுகளில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதை பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது.
அதே நேரத்தில் தாஜ்மஹாலை பாதுகாப்பதில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா என்ற கேள்வி உருவாகிறது. இந்தியாவில் எத்தனையோ அதிசயங்கள் இருந்தாலும், அவற்றில் தாஜ்மஹால் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. அத்தகைய தாஜ்மஹாலுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அது நமக்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கும் பெரிய இழப்புதான்.
ஆகையால், தாஜ்மஹாலை முறையாக பாதுகாப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தாஜ்மஹாலை மூடிவிடலாம். அல்லது அதை இடித்து தள்ளி விடலாம் என்று மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.