குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை.. நிர்பயா வழக்கில் சுப்ரீம் கோர்ட் அதிரடி!
நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது.
டெல்லி: நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை எனக்கூறி சுப்ரீம் கோர்ட் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை உறுதி செய்துள்ளது. இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்பதால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந்தேதி நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பஸ்சில் 6 பேர் கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். அவருக்கு டெல்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டது.
எந்த முன்னேற்றமும் இல்லாததால் நிர்பயா சிங்கப்பூருக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார்.
நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆங்காங்கே போராட்டங்கள் வெடித்தன.
ஒருவர் தற்கொலை, ஒருவர் விடுவிப்பு
இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ராம்சிங் என்பவர் டெல்லி சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு இளம் குற்றவாளி 3 ஆண்டு தண்டனைக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
குற்றவாளிகள் மேல்முறையீடு
எஞ்சிய 4 பேருக்கு விசாரணை கோர்ட்டு மரண தண்டனை விதித்தது. இதை டெல்லி ஹைகோர்ட்டும் கடந்த 2014-ம் ஆண்டு உறுதி செய்தது. இந்த தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
15 நிமிடம் தீர்ப்பு வாசிப்பு
இந்த வழக்கில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தனித்தனியாக தீர்ப்பு வழங்கியது. கிட்டதட்ட 15 நிமிடம் தீர்ப்பை வாசித்த நீதிபதிகள் மாணவி பல சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவித்தனர்.
சமுதாயத்தின் மீதான நம்பிக்கை..
வழக்கை விசாரித்தே கீழ் நீதிமன்றங்கள் மரண தண்டனை விதித்ததாக நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த குற்றம் சமுதாயத்தின் மீதான நம்பிக்கையை குலைத்து விட்டதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
கருணை காட்ட முகாந்திரமில்லை
குற்றவாளிகளுக்கு கருணை காட்ட எந்த முகாந்திரமும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். ஆகையால் 4 பேருக்கும் தூக்கு தண்டனை உறுதி செய்யப்படுவதாக அறிவித்தனர். இந்த வழக்கு அரிதிலும் அரிதானது என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.