குஜராத் வன்முறையில் அமித்ஷா தொடர்பு குறித்து விசாரிக்க கோரிய போலீஸ் அதிகாரி சஞ்சீவ்பட் மனு தள்ளுபடி
டெல்லி: குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நிகழ்ந்த மதவன்முறையில் அம்மாநில முன்னாள் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தேசியத் தலைவருமான அமித்ஷாவுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க கோரி மூத்த போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.
2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கரசேவகர்கள் சென்ற ரயில் குஜராத்தின் கோத்ரா என்ற இடத்தில் எரிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குஜராத்தில் மதவன்முறை வெடித்தது. ஆயிரக்கணக்கானோர் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டனர்.
இந்த படுகொலைகளின் போது இந்துக்கள் தங்களது கோபத்தை தீர்த்துக் கொள்ள போலீசார் அனுமதிக்க வேண்டும் என்று முதல்வராக இருந்த நரேந்திர மோடி எங்களுக்கு உத்தரவிட்டார்; 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ந் தேதி நரேந்திர மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் நானும் கலந்து கொண்டேன். அதில்தான் இத்தகைய உத்தரவை மோடி பிறப்பித்தார் என பரபரப்பு குற்றம்சாட்டி இருந்தார் அம்மாநில ஐ.பி.எஸ். அதிகாரி சஞ்சீவ் பட். அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக இருந்தவர் தற்போதைய பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா.
ஆனால் இதை குஜராத் காவல்துறை தலைவர் மறுத்தார். நரேந்திர மோடி வீட்டில் நடைபெற்ற கூட்டத்தில் சஞ்சீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை எனவும் அவர் கூறியிருந்தார். இந்நிலையில் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாக சாட்சி கூறும்படி கே.டி. பந்த் என்ற தமது ஓட்டுநரை சஞ்சீவ் பட் அடித்து துன்புறுத்தியதாகவும் ஒரு சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக சஞ்சீவ் பட் மீது வழக்கும் போடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குஜராத் அரசுக்கும் சஞ்சீவ் பட்டுக்கும் இடையே மோதல் தொடர்கதையானது. சஞ்சீவ் பட் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அடுத்தடுத்து சஸ்பென்ட் செய்யப்பட்டார். இந்நிலையில் பணிக்கு தகுந்த காரணம் இல்லாமல் வரவில்லை எனக் கூறி மத்திய உள்துறை அமைச்சகம், காவல்துறை பணியில் இருந்தே ஒட்டுமொத்த சஞ்சீவ்பட்டை கடந்த ஆகஸ்ட் மாதம் நிரந்தரமாக நீக்கி உத்தரவிட்டிருந்தது. இது பெரும் பரபரப்பை கிளப்பியது.
இந்நிலையில் தம் மீதான ஓட்டுநரைத் தாக்கிய வழக்கு மற்றும் குஜராத் கூடுதல் அட்வகேட் ஜெனரலின் இ மெயிலை ஹேக் செய்த வழக்கு ஆகியவை தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு விசாரிக்க வேண்டும் என்றும் கோத்ரா ரயில் எரிப்புக்குப் பின்னர் நடந்த வன்முறைகள் தொடர்பாக குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரும் பா.ஜ.க. தலைவருமான அமித்ஷாவையும் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் சஞ்சீவ் பட் தாக்கல் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார். இம்மனுக்கள் மீது இன்று விசாரணை நடைபெற்றது. தலைமை நீத்பதி ஹெச்.எல். தத்து தலைமையிலான பெஞ்ச் முன்பு இம்மனுக்கள் விசாரணைக்கு வந்தன. அப்போது சஞ்சீவ் பட் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றம் இவ்வழக்குகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியது.