ஜெ.சொத்துக்குவிப்பு மேல்முறையிட்டு வழக்கில் தீர்ப்பு வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு!
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
டெல்லி: முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி இன்றுடன் ஓராண்டு நிறைவடைந்துள்ளது.
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது வருமானத்துக்கு அதிகமாக ரூ.66.66 கோடி சொத்துக் குவித்ததாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
இதையடுத்து தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தி ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, வளர்ப்பு மகன் சுதாகரன், சசிகலாவின் உறவினர் இளவரசி ஆகியோருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
பெங்களூருக்கு மாற்றம்
சென்னையில் நடைபெற்ற இவ்வழக்கை, திமுக பொதுச்செயலாளர் அன்பழகனின் கோரிக்கையை ஏற்று கடந்த 2004-ம் ஆண்டு பெங்களூருவுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தீவிரமான விசாரணை
இதையடுத்து சொத்துக்குவிப்பு வழக்கில் ஆவணங்கள் மொழிபெயர்ப்பு, சாட்சி விசாரணை, குறுக்கு விசாரணை, குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்கு மூலம், இறுதிவாதம் உள்ளிட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
ஜெ.வுக்கு ரூ.100 கோடி அபராதம்
இறுதியில் 2014, செப்டம்பர் 27-ம் தேதி பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும், சசிகலா உள்ளிட்டோருக்கு ரூ.10 கோடியும் அபராதம் விதித்து தீர்ப்பை வழங்கினார்.
விடுதலை செய்த குமாரசாமி
இதையடுத்து ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட நால்வரும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இதை விசாரித்த நீதிபதி குமாரசாமி 2015, மே 11-ம் தேதி ஜெயலலிதா,சசிகலா உள்ளிட்ட நால்வரையும் நிரபராதி என விடுதலை செய்து உத்தரவிட்டார்.
சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு
இதை எதிர்த்து கர்நாடக அரசு, சுப்பிரமணியன் சுவாமி மற்றும் அன்பழகன் தரப்பில் கடந்த ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
3 பேரும் குற்றவாளி
இந்த வழக்கில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. நாடே எதிர்பார்த்த இந்த தீர்ப்பில் சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகிய 3 பேரும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குன்ஹாவின் தீர்ப்பு உறுதி
3 பேருக்கும் 4 ஆண்டு சிறை, தலா ரூ.10 கோடி அபராதம் விதித்து குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் அவர்கள் மூன்று பேரும் உடனடியாக சரணடைய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது.
ஜெ.விடுவிப்பு
4 பேரையும் விடுதலை செய்து கர்நாடாக நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. ஜெயலலிதாவுக்கும் இதே தீர்ப்புதான் அளிக்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா தற்போது உயிருடன் இல்லை என்பதால் அவர் இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.