தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை: சுப்ரீம் கோர்ட் அதிரடி
டெல்லி: தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை தொடங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது சுப்ரீம் கோர்ட். சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு தொடங்கியுள்ள ஜவாஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் நடத்தப்படுகின்றன. இந்த பள்ளிகளில் அந்தந்த மாநிலங்களின் தாய் மொழி, ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிப்பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன.
ஆனால் ஹிந்தி மொழியை பாடத்திட்டத்தில் வைத்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்த பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க இதுவரை, தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்காததால் இப்பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க முடியவில்லை.
நவோதயா பள்ளிகளை திறக்க வழக்கு
இந்த நிலையில், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவிட வேண்டும் என்று நாகர்கோவிலைச் சேர்ந்த ஜெயக்குமார் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு செய்திருந்தார். இந்த வழக்கு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, நவோதயா பள்ளிகளின் சமிதி சார்பில் புதுச்சேரி நவோதயா பள்ளி முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகினார்.
ஹிந்தி பாடம்
தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் முதன்மை பாடமாகவும், 11, 12 ஆம் வகுப்புகளில் கூடுதல் பாடமாகவும் தமிழ் கற்பிக்கப்படும் என்று வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார். இதை பதிவு செய்த ஹைகோர்ட் கிளை, இதே வாதத்தை நவோதயா பள்ளிகளின் மண்டல இயக்குநர் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அதே போல, நவோதயா பள்ளிகளை ஆரம்பிப்பது தொடர்பாக தமிழக அரசு தனது முடிவைத் தெரிவிக்க அவகாசம் வழங்கியும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இடம் வழங்க கோரிக்கை
"ஜனவரி மாதத்தில் நவோதயா பள்ளிகளின் மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ள நிலையில் முதல் 3 ஆண்டுகளுக்கு 240 மாணவர்கள் பயில்வதற்கான வசதியுடன் கூடிய தற்காலிக கட்டடத்தில் பள்ளி இயங்கலாம் என விதி உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நவோதயா பள்ளியைத் தொடங்க அனுமதியும், இடமும் வழங்கினால், மத்திய அரசு, பள்ளி கட்டமைப்பு வசதிக்காக ஒரு மாவட்டத்திற்கு ரூ.20 கோடி வழங்கும்" என்று நீதிமன்றத்தில் வெங்கடேஸ்வரன் தெரிவித்திருந்தார்.
உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
இதனிடையே ஹைகோர்ட் கிளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நவோதயா பள்ளிகளை அமைப்பதற்கான தடையில்லா சான்றை 8 வாரங்களில் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகியது. நவோதயா பள்ளிகள் அமைக்க போதிய கால அவகாசம் தேவை என்பது தமிழக அரசு வாதம். நவோதயா பள்ளிகளை அமைக்க போதிய இட வசதி இல்லை என்பதும் தமிழக அரசின் வாதம். இதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைக்கும் ஹைகோர்ட் மதுரை கிளை உத்தரவிற்கு தற்காலிக தடை விதித்துள்ளது.