நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க முடியாது.. பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்!
நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
டெல்லி: நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரிய பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சி.பி.எஸ்.இ. பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் பொது நுழைவுத் தேர்வலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி முருகவேல் என்பவர் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அவர் தனது மனுவில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படிப்பவர்களுக்கு தான் நீட் தேர்வு சாதகமாக இருப்பதாக கூறியிருந்தார்.
தமிழகத்தில் சிபஎஸ்இ பள்ளிகள் அதிக எண்ணிக்கையில் இல்லை என்றும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் படி தான் சுமார் 11 லட்சம் மாணவர்கள் பிளஸ் 2 படித்து வருகின்றனர் என்றும் தெரிவித்திருந்தார். எனவே பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு ஏற்றதல்ல
இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.எஸ்.கெஹர் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீட் தொடர்பான இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு ஏற்றதல்ல என நீதிபதிகள் கூறினர்.
சிபிஎஸ்இக்கு ஏன் எதிர்ப்பு?
சிபிஎஸ்இ பாட திட்டம் கடினமாக உள்ளது என தமிழக மாணவர்கள் எதிர்ப்பது ஏன் என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மருத்துவ மாணவர் சேர்க்கையில் உள்ள நடைமுறை குறித்து விழிப்புணர்வு நமக்கு அவசியம் என்றனர்.
வழக்கு தள்ளுபடி
மேலும் தேவையில்லாத வாதங்களையே மீண்டும், மீண்டும் முன்வைப்பதா என்றும் நீதிபதிகள் வினவினர். பின்னர் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
தமிழக அரசுக்கு நோட்டிஸ்
இதனிடையே, நீட் தேர்வில் பங்கேற்ற தமிழக பள்ளி பாட திட்ட மாணவர்களுக்கு 85 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், இது குறித்து வரும் வெள்ளிக்கிழமைக்குள் பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிட்டது.