ஏன் இதை செய்யவில்லை? மத்திய அரசு, வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
டெல்லி: வாட்ஸ்அப் நிறுவனம், ஏன் இன்னும், இந்தியாவில் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்கவில்லை என கேள்வி எழுப்பியுள்ளது, உச்ச நீதிமன்றம்.
இதுதொடர்பாக நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என கோரி வாட்ஸ்அப் நிறுவனம், மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் மற்றும், மத்திய நிதி அமைச்சகத்திற்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வதந்திகள் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு, வாட்ஸ்அப் நிறுவனத்தை வலியுறுத்திவருகிறது. ஆனால், பயனாளர்கள் பரிமாறிக்கொள்ளும் தகவல்களில் ரகசியம் காக்கப்படுவது உறுதி என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறிவிட்டது. எனவே, பயனர்களின் தகவல் பரிமாற்றத்தை மத்திய அரசு கண்காணிக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் இந்த நோட்டீசை அனுப்பியுள்ளது.
கடந்த வாரம் வாட்ஸ் அப் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கிறிஸ் டேனியல்ஸ், மத்திய தகவல் தொழில்நுட்ப அதிகாரியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, வாட்ஸ்அப் நிறுவனம் இந்தியாவில் தனது அலுவலகம் அமைக்க வேண்டும் என்றும் குறை தீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத், வாட்ஸ் அப் தலைமைச் செயல் அதிகாரியிடம் வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.