லோயா வழக்கை விசாரித்த நீதிபதி உருக்கம்... நேர்மையை சந்தேகப்படுவதா என வேதனை!
நீதிபதி லோயா வழக்கை விசாரித்த நீதிபதி தன்னுடைய நேர்மை மீது 4 நீதிபதிகள் சந்தேகம் எழுப்பியுள்ளது வருத்தம் அளிப்பதாக மனமுடைந்து தெரிவித்துள்ளார்.
டெல்லி : நீதிபதி அருண் மிஸ்ரா தன் மீது 4 நீதிபதிகள் எழுப்பியுள்ள கேள்விகள் தனது நேர்மையை சந்தேகப்படுவதைப் போன்றது என்று மனமுடைந்து தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற நீதிபிதிகள் 4 பேர் பத்திரிக்கையாளர்களை முதன் முறையாக சந்தித்து நீதிபதி லோயா மரண வழக்கு முறையாக விசாரிக்கப்படவில்லை, வழக்குகள் ஒதுக்குவதில் தலைமை நீதிபதி பாரபட்சம் காட்டுகிறார் என்பன உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இதனையடுத்து தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அதிகாரப்பூர்வமற்ற ஆலோசனைக் கூட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நீதிபதிகள் முன் வைத்த விவாதங்கள் உணர்வுப்பூர்வமாக அமைந்தன. நீதிபதி அருண் மிஸ்ரா தன் மீது 4 நீதிபதிகள் முன் வைத்த குற்றச்சாட்டுகள் நியாயமற்றவை என்றும், நீதிபதி லோயா மரண வழக்கு விசாரணையில் சட்டப்படி என்ன தீர்ப்பு வழங்க வேண்டுமோ அதை நேர்மையாக வழங்கியதாகவும் அருண் மிஸ்ரா மனமுடைந்து தெரிவித்தார்.
4 நீதிபதிகளும் தன்னுடைய பெயரை சுட்டிக்காட்டாவிட்டாலும், அவர்கள் சுட்டிக்காட்டிய வழக்கை விசாரித்து தீர்ப்பளித்த நீதிபதி என்ற முறையில் தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தனக்கு அதிக பணிச்சுமை இருந்த போதும் ஒதுக்ககப்படும் வழக்குகளை உரிய முறையில் விசாரிக்க என்னுடைய கடின உழைப்பை போட்டு உழைக்கிறேன். இதற்கு முன்னர் கூட முன்னாள் தலைமை நீதிபதிகள் டி எஸ் தாகூர் மற்றும் ஜேஎஸ் கெஹர் உள்ளிட்டோர் கஷ்டமான வழக்குகளை ஒதுக்கிய போதும் அவ்வாறே செயல்பட்டதாகவும் மிஸ்ரா குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதி மிஸ்ரா இவ்வாறு மனமுடைந்து பேசிய போது புயலை கிளப்பிய நீதிபதி செல்லமேஸ்வர், நீதிபதி மிஸ்ரா தோளில் கையை போட்டு தாங்கள் அவருக்கு எதிராக எந்த குற்றச்சாட்டையும் முன் வைக்கவில்லை என்றும், உச்சநீதிமன்றத்தில் என்ன பிரச்னை நிலவுகிறது என்பதை மட்டுமே எழுப்புவதாகவும் கூறினார்.
உச்சநீதிமன்றத்தில் 2,3,4 மற்றும் 5வது அமர்வு தலைமை நீதிபதி மீது குற்றச்சாட்டு வைத்த நீதிபதி செல்லமேஸ்வர், ரஞ்சன் கோகாய், மதன் பி லோகூர், குரியன் ஜோசப் உள்ளிட்டோர் தலைமையில் இயங்குகிறது. தலைமை நீதிபதியுடனான கூட்டம் முடிந்த பின்னர் நீதிபதிகள் வழக்கம் போல தங்கள் பணிக்குத் திரும்பினர்.
இதன் பின்னர் வழக்கறிஞர் லுத்ரா தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பு உச்சநீதிமன்ற மாண்பை கெடுக்கும் வகையில் செயல்பட்ட 4 நீதிபதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு புன்னகையை மட்டுமே பதிலாக வைத்துவிட்டு அமைதியாக இருந்தார் தலைமை நீதிபதி.