வரதட்சணை புகார் அளித்தால் உடனே கைது செய்யலாம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
Recommended Video
டெல்லி: வரதட்சணை புகார் அளித்தால் உடனடியாக கைது செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதன் மூலம், இரு நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பு மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மணமான பெண்களை கொடுமைப்படுத்தும் சட்டப்பிரிவு 498ஏ தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூலை மாதம் உச்சநீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில், புகார் மீது உண்மை உள்ளதா என்பதை சோதித்து பார்க்காமல் கைது செய்ய கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. வரதட்சணை புகார் தொடர்பாக மாவட்ட வாரியாக குழு அமைத்து, அந்த குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலேயே, போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது.
இதையடுத்து உத்தரவை மாற்ற கோரி உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசூட் ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது 2 நீதிபதிகள் அமர்வு கூறிய தீர்ப்பை மாற்றி, வரதட்சணை புகார் கொடுத்ததுமே கைது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புகார் அளிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அதே நேரம், குற்றச்சாட்டுக்கு ஆளாவோருக்கு, முன்ஜாமீன் வழங்குவது குறித்து சம்பந்தப்பட்ட கோர்ட்கள் முடிவு செய்யலாம். மேலும், வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்க தேவையில்லை என கூறி, முந்தைய அமர்வு வழங்கிய தீர்ப்பை மாற்றி உத்தரவிட்டுள்ளது.