10 வயது சிறுமியின் 26 வார கருவை கலைக்க கோரிக்கை.. மத்திய அரசிடம் விளக்கம் கேட்கிறது சுப்ரீம் கோர்ட்
10 வயது சிறுமியின் 26 வார கருவை கலைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனு குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அளித்துள்ளது.
டெல்லி: சண்டீகரில் பாலியல் பலாத்காரத்துக்குள்ளாக்கப்பட்ட சிறுமியின் 26 வார கருவை கலைக்க கோரிய மனு குறித்து பதில் அளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சண்டீகரில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 10 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 26 வார கருவை கலைப்பதற்கு சிறுமி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்திய கருக்கலைப்புச்சட்டம் 1971-ல் சட்டத்தின்படி 20 வாரத்துக்குள் உள்ள கருவை மட்டுமே கலைக்க அனுமதிக்கப்படும். எனவே சண்டீகரில் உள்ள மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இதையடுத்து கருவை கலைக்க அனுமதி கோரி பாதிக்கப்பட்ட சிறுமியின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்கறிஞர் அலாக் அலோக் ஸ்ரீவாஸ்தவா தாக்கல் செய்து உள்ளது மனுவில், இந்தியா முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நிரந்தரமான மருத்துவ வாரியத்தை அமைக்க வேண்டும், பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகளின் வயிற்றில் வளரும் கருவை முன்கூட்டியே கலைக்க சிறந்த மருத்துவ வசதிகளுடன் வாரியம் அமைக்க நீதிமன்றம் சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமியை வலுக்கட்டாயமாக குழந்தையை பெற்றுக் கொள்ள வற்புறுத்தினால், சிறுமிக்கோ, அவருடைய குழந்தைக்கோ பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதே மருத்துவ நிபுணர்களின் கருத்தாக உள்ளது என்பதும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டது.
இந்திய கருக்கலைப்புச் சட்டம் 1971-இல் திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் பாலியல் பலாத்காரத்தினால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் வயிற்றில் வளரும் கருவை, 20 வாரங்களை கடந்தாலும் கலைப்பதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்றும் அந்த மனுவில் கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த மனு தொடர்பான விசாரணை இன்று தலைமை நீதிபதி ஜெ.எஸ். ஹெகர் மற்றும் நீதிபதி டி.சந்திரஹூட் தலைமையிலான அமர்வு முன்பு நடந்தது. மனுவை விசாரித்த அமர்வு நீதிபதிகள், இந்த மனுவுக்கு மத்திய அரசு மற்றும் பிற தரப்புக்கள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் விடுக்க உத்தரவிட்டனர்.
பாதிக்கப்பட்ட சிறுமியை பரிசோதனை செய்து ஜூலை 26-ஆம் தேதிக்குள் மருத்துவ அறிக்கையை சீலிடப்பட்ட உறையில் பெறவும் கேட்டுக் கொண்ட நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பான விசாரணை மீண்டும் ஜூலை 28-ம் தேதி நடைபெறும் என்றும் தெரிவித்தனர்.