மலேகான் வழக்கு: சாத்வி பிரக்யா ஜாமீன் கோரிக்கையை பரிசீலிக்கலாம்- சுப்ரீம்கோர்ட்; விடுதலையாகிறார்...
டெல்லி: மலேகான் குண்டுவெடிப்பு சம்பவத்தில் சாத்வி பிரக்யா சிங் தாகுர், லெப். கேணல் புரோகித் ஆகியோருக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் முன்வைக்கப்படாத நிலையில் ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் மலேகானில் 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி குண்டுகள் வெடித்தன. இதில் 7 பேர் பலியாகினர்.
முதலில் இந்த சம்பவத்துக்கு முஸ்லிம் அமைப்புகள் காரணம் என்று கூறப்பட்டது. ஆனால் இது தொடர்பாக விசாரணை நடத்திய மகாராஷ்டிரா சிறப்பு புலனாய்வு அமைப்பினர், இந்த சம்பவத்துக்கு இந்துத்துவா தீவிரவாதிகளே காரணம் என கண்டறிந்தனர்.
இதனைத் தொடர்ந்து சாத்வி பிரக்யா சிங் தாகுர் மற்றும் லெப். கேணல் புரோகித் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் தங்களுக்கு ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
இம்மனு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா மற்றும் சிவகீர்த்தி சிங் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னிலையில் இன்று விசாரணை நடைபெற்றது.
இந்த விசாரணையின் முடிவில், சாத்வி பிரக்யா, புரோகித் உட்பட 4 பேர் மீது மகாராஷ்டிரா அரசின் சிறப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனால் அந்த சட்டத்தின் கீழ் இவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டதற்கு இதுவரையில் வலுவான எந்த ஆதாரமும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இதனால் இவர்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பிருக்குமா என்ற சந்தேகம் எழுகிறது. ஆகையால் இவர்களுக்கு ஜாமீன் வழங்குவது குறித்து விசாரணை நீதிமன்றம் பரிசீலிக்கலாம் என்று தெரிவித்தனர்.
அதே நேரத்தில் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ராகேஷ் தாவ்தே சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டதற்கான முகாந்திரம் இருப்பதையும் நீதிபதிகள் உறுதி செய்தனர். ராகேஷ் மீதான வழக்கு விசாரணையை விரைந்து முடிவுக்கவும் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.