கோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடனை திருப்பி செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உத்தரவு!
கோச்சடையான் படத்துக்கு வாங்கிய கடன் நிலுவைத் தொகையை செலுத்த லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
டெல்லி : கோச்சடையான் படத்திற்காக வாங்கிய கடனுக்கான நிலுவைத் தொகையை பெங்களூரைச் சேர்ந்த நிறுவனத்திற்கு 12 வாரத்திற்குள் வழங்குமாறு லதா ரஜினிகாந்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தை வைத்து அவருடைய மகள் சவுந்தர்யா கோச்சடையான் 3டி அனிமேஷன் படத்தை இயக்கினார். இந்தப் படமானது 2014 மே மாதம் வெளியானது. படம் வெளியீட்டுக்கு முந்தைய தயாரிப்புப் பணிக்காக ஆட் பீரோ விளம்பர நிறுவனம் லதா ரஜினிகாந்த் இயக்குநராக உள்ள மீடியா ஒன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துக்கு கடன் அளித்திருந்தது. இந்தக் கடனுக்கு லதா ரஜினிகாந்த் உத்தரவாதம் அளித்திருந்ததாக கூறப்படுகிறது.
கோச்சடையான திரைப்பட உரிமையை வழங்கவும் மீடியா ஒன் குளோபல் நிறுவனம் ஆட் பீரோ நிறுவனத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிகிறது. ஆனால் பட உரிமையையும் தராமல், பணத்தையும் திருப்பிக் கொடுக்காமல் இழுத்தடிப்பு செய்ததோடு வேறு நிறுவனத்திற்கு பட வெளியீடு உரிமை வழங்கப்பட்டதையடுத்து ஆட் பீரோ நிறுவனம் நீதிமன்றத்தை நாடியது.
கடனாக வாங்கிய பணத்தில் ரூ. 8.70 கோடியை மட்டுமே திருப்பித் தந்ததாகவும், எஞ்சிய தொகையைத் தரவில்லை என்றும் ஆட் பீரோ நிறுவனம் குற்றம்சாட்டியது. பெங்களூரைச் சேர்ந்த இந்த நிறுவனம் லதா ரஜினிகாந்த் மீது புகார் அளித்தும் போதிய ஆதாரம் இல்லை என்று ஆட் பீரோ நிறுவனத்தின் மனுவை கர்நாடக ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது.
இதனால் அந்நிறுவனம் உச்சசநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஆட் பீரோ நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய ரூ. 80 லட்சத்தை லதா ரஜினிகாந்தோ அல்லது மீடியா ஒன் நிறுவனமோ ஜூலை 3ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று ஏற்கனவே உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவு தொடரும் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.