சகாரா நிறுவன தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் அதிரடி
டெல்லி: சுமார் இருபதாயிரம் கோடி ரூபாய் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி சகாரா நிறுவன தலைவரான சுப்ரதா ராய் மீது தொடரப்பட்ட வழக்கில் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பணத்தை செலுத்த தயாராக இருக்கும் நிலையில் தன்னை கைது செய்ய பிறப்பித்த உத்தரவை எதிர்த்தும், தன்னை ஜாமீனில் விடுதலை செய்யுமாறும் உச்சநீதிமன்றத்தில் சுப்ரதா ராய் மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீது இன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், சுப்ரதா ராயின் கோரிக்கையை நிராகரித்து, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது.
"சிறப்பு விசாரணை குழு, ஹைகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் அனைத்து உத்தரவுகளையும் சகாரா மீறியுள்ளது. எங்களது முந்தைய உத்தரவுகளையும் ராயும் அவரது குழுமமும் மதிக்காத நிலையில், இந்த ஜாமீன் மனுவுக்கு எந்த தகுதியும் இருப்பதாக தெரியவில்லை.
முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி தருவது தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் பலனளிக்காத நிலையில்தான் கைது நடவடிக்கையை நாங்கள் தேர்வு செய்ய வேண்டியதாகி விட்டது. நீதிமன்ற உத்தரவுகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது. எங்களது உத்தரவை மதிக்காத செயல் என்பது சட்டத்தின் வேரையே பதம் பார்ப்பது போன்றதாகும்.
இதைப்போன்ற நடத்தையை ஏற்றுக்கொள்ள முடியாது. சட்டத்துக்கு உட்பட்டே சுப்ரதா ராய் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கு முன்னர் தேவையான அனைத்து சட்டபூர்வ நடைமுறைகளையும் நாங்கள் பின்பற்றியுள்ளோம்" என்று கூறியுள்ள உச்சநீதிமன்றம் வாடிக்கையாளர்களின் பணத்தை திருப்பி தருவதற்கான புதிய திட்டத்தை சுப்ரதா ராய் அறிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது. மேலும் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துள்ளது.
கடந்தவாரம் கோர்ட்டில் ஆஜரான சுப்ரதா ராய், டெல்லியில் வெயில் அதிகமாக இருப்பதால் தன்னால் சிறைச்சாலையில் தாக்குப்பிடிக்க முடியவில்லை, எனவே ஜாமீன் அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.